

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: ஆசான் மறைந்த சில வாரங்களிலேயே அவரது மாணவரையும் இழந்துவிட்டது தமிழ்த் திரையுலகம். இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக, அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக, சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றிபெற்ற அசாத்திய இயக்குநராக வலம் வந்தவர் பாக்யராஜ். திரைத்துறையில் இன்னும் பல ஆண்டுகள் பங்களிக்கும் வாய்ப்பையும் ஆற்றலையும் பெற்றிருந்த அவர், தம் வாழ்வை நிறைவு செய்து கொண்டுவிட்டது பெரும் இழப்பு.
அவரை இழந்து தவிக்கும் பூர்ணிமா பாக்யராஜ், சாந்தனு, சரண்யா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். தமது படைப்புகளால் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாகத் தொடர்ந்து வாழ்வார்.
பழனிசாமி (அதிமுக): பன்முகத்திறமையாளராக விளங்கிய பாக்யராஜ், எம்.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்டிருந்தவர். இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர் மறைவு, ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவர் குடும்பத்தினருக்கும் திரைத்துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரேமலதா (தேமுதிக): தமிழ்த் திரையுலகின் பொக்கிஷமாகத் திகழ்ந்த பாக்யராஜ், திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு எனப் பல்வேறு துறைகளில் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர். அவர் இயக்கிய மற்றும் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று,பல வெள்ளி விழா திரைப்படங்களாக அமைந்துள்ளன. அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தேமுதிக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புமணி ராமதாஸ் (பாமக): திரைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் வல்லமை பெற்று பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தவர். இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர். திரையுலகில் எவரும் பேசத் துணியாத பல உண்மைகளை எவர் மனமும் புண்படாதவாறு நகைச்சுவையுடன் திரைமொழியாகப் பேசியவர். திரைப்படங்களின் வாயிலாக சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் கூறியவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.
பெ.சண்முகம் (மார்க்சிஸ்ட் கம்யூ): கிராமிய வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையினாலும், இயல்பான நகைச்சுவையினாலும், குடும்ப பாங்கான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவர். அரசியலிலும், வார இதழின் ஆசிரியராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். பல திரைப்பட இயக்குநர்களை உருவாக்கியதிலும் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூ): திரைத்துறையில் மட்டும் அல்லாமல், அரசியலிலும் கால்பதித்து நடைபோட்டவர். அதிமுக உறுப்பினராக இணைந்து செயல்பட்டவர். அவரது இயல்பான பேச்சு பலரையும் பரவலான ரசிகர் வட்டத்தை உருவாக்கித் தந்தது. அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். நடிகரும், எம்பியுமான கமல்ஹாசன்: கே. பாக்யராஜ் என்ற (எனக்கு 50 வருடங்களுக்கு முன் அறிமுகமான) ராஜன் இன்று இல்லை. ஒரே மாதத்துக்குள் 2 ராஜாக்களை இழந்து விட்டது தமிழ் கூறும் நம் சினிமா.
டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம்: டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட கே.பாக்யராஜ் மறைவுச் செய்தி துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப பாசம், பெண்கள் முன்னேற்றம், சமூகப் பொறுப்பு, கல்வி மற்றும் மனிதநேயம் போன்ற உயர்ந்த கருத்துகளை தனது படைப்புகளில் மக்களுக்கு எளிமையாக எடுத்துச் சென்றவர். அவரது மறைவு திரையுலகுக்கும் கலை உலகுக்கும்ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.