மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவு
மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து
Updated on
2 min read

மதுரை: வேறு மதத்​தில் இருந்து முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய​வருக்கு பிற்​படுத்​தப்​பட்ட முஸ்​லிம் என சாதிச் சான்​றிதழ் வழங்​கும் அரசாணையை ரத்து செய்து உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

தூத்​துக்​குடி தெற்கு இலந்​தைகுளத்​தைச் சேர்ந்த பரமசிவம் என்​பவர் கடந்த 2015-ல் முஸ்​லிம் மதத்​துக்கு மாறி, பெயரை சமீர் அகமது என மாற்​றிக் கொண்​டார். அதன்​பின்​னர், பிற்​படுத்​தப்​பட்​டோர் முஸ்​லிம் பிரி​வில் ‘முஸ்​லிம் லெப்​பை’ என சான்​றிதழ் கேட்டு விண்​ணப்​பித்​தார். அவரது மனு நிராகரிக்​கப்​பட்ட நிலை​யில், முஸ்​லிம் லெப்பை என சான்றிதழ் வழங்க உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். மனுவை விசா​ரித்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், பி.பி.​பாலாஜி அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வு: தமிழக அரசு 2024 மார்ச் 9-ம் தேதி பிறப்​பித்த அரசாணை அடிப்​படை​யில், மனு​தா​ரர் தனக்கு பிற்​படுத்​தப்​பட்​டோர் முஸ்​லிம் சான்​றிதழ் கோரி மனு அளித்​துள்​ளார்.

அரசாணை​யில், ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், சீர்​மரபினர் அல்​லது பட்​டியல் சாதி பிரிவு​களைச் சேர்ந்​தவர்​கள் முஸ்​லிம் மதத்​தைச் சேர்ந்த 7 பிரிவு​களில் ஏதேனும் ஒன்​றுக்கு மாறும்​போது அவர்​களுக்கு ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்பு முஸ்​லிம்​கள்’ என சான்​றிதழ் வழங்​கலாம்’ என்று கூறப்​பட்​டுள்​ளது.

மதம், இனம், சாதி, பிரிவு, பிறந்த இடம் அடிப்​படை​யில் பாகு​பாடு காட்​டு​வதை இந்திய அரசி​யலமைப்​புச் சட்​டம் தடை செய்​கிறது. அதே​நேரம், சமூக மற்​றும் கல்வி ரீதி​யாக பின்​தங்​கிய குடிமக்​கள் அல்​லது பட்​டியல் சாதி​யினர் அல்​லது பட்​டியல் பழங்​குடி​யினரின் முன்​னேற்​றத்​துக்​காக சிறப்பு சலுகைகள் வழங்க அரசுக்கு அதி​காரம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்த இடஒதுக்​கீடு விஷ​யத்​தில் தமிழக அரசு கவன​மாக செயல்​பட்​டுள்​ளது. முஸ்​லிம் மதத்​தைப் பின்​பற்​றும் அனை​வரை​யும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் பிரி​வில் சேர்க்​காமல், குறிப்​பிட்ட சில பிரிவு​களை மட்​டுமே பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் பிரி​வில் சேர்த்​துள்​ளது. அரசாணை​யில், ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர், சீர்​மரபினர் அல்​லது பட்​டியல் சாதி​யினர் பிரி​வில் இருந்து முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய ஒருவர் இடஒதுக்​கீட்​டுச் சலுகை​யைப் பெற ‘பிற்​படுத்​தப்​பட்ட வகுப்​பினர் (முஸ்​லிம்)’ எனக் கருதலாம். மதம் மாறிய பிறகு லெப்பை உள்​ளிட்ட 7 பிரிவு​களில் ஒன்​றைச் சேர்ந்​தவர் என்​ப​தற்​கான சாதிச் சான்​றிதழ் வழங்​கலாம்’ என்​றும் கூறப்​பட்​டுள்​ளது. இது சட்​டப்​படி செல்​லுமா என்ற கேள்வி எழுந்​துள்​ளது.

‘இந்து மதம்​போல அல்​லாமல் தங்​களது மதங்​கள் சமூக சமத்​து​வத்தை அளிப்​ப​தாக கிறிஸ்தவ மிஷனரி​களும், முஸ்​லிம் பிரச்​சா​ரகர்​களும் கூறி வரு​கின்​றனர். மதமாற்​றத்தை ஊக்​குவிக்​கும் இத்​தகைய நிலைப்​பாடு இருக்​கும்​போது, முஸ்​லிம் மதத்​தி​லும் படிநிலை அமைப்பு உள்​ளது என்​பது நேர்​மையற்​றது. முஸ்​லிம் மதத்​தில் சில பிரிவு​களை ‘பிற்​படுத்​தப்​பட்​ட​வை’ என்​றும், மற்​றவற்றை ‘முன்​னேறிய​வை’ என்​றும் வகைப்​படுத்​து​வது குர்​ஆனின் கட்​டளை​களுக்கு முரணானது. இஸ்​லாம் ஒரு சமத்​துவ சமு​தா​யத்தை உரு​வாக்​கவே விழைகிறது. இறைவனின் பார்​வை​யில் அனை​வரும் சமம். அங்கு சமூகப் படிநிலைகள் ஏதும் இல்​லை.

இருப்​பினும், வரலாற்று ரீதி​யான காரணங்​களால், முஸ்​லிம் சமூக​மும் பல்​வேறு பிரிவு​களாகப் பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இது இந்து மதத்​தில் உள்ள சாதி அமைப்​புக்கு இணை​யானவை என்​றுகூட துணிந்து கூறலாம். சாதி எவ்​வாறு பிறப்​பால் தீர்​மானிக்​கப்​படு​கிறதோ, அதே​போல ஒரு​வர் பிறப்​பாலேயே லெப்​பை, ராவுத்​தர், மரைக்​காயர் அல்​லது தக்​காணி முஸ்​லி​மாக அறியப்​படு​கிறார்.

சென்னை உயர் நீதி​மன்​றம் 75 ஆண்​டு​களுக்கு முன்பு பிறப்​பித்த உத்​தர​வில், ‘முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய​வுடன் ஒரு​வர் முஸ்​லிம் ஆகிறார்’ என்று கூறப்​பட்​டுள்​ளது. அவரை ஒரு குறிப்​பிட்ட பிரிவுக்​குள் அடக்க முடி​யாது. இந்த உத்​தரவு அமலில் இருக்​கும்​போது, வெறும் அரசாணையால் நீதி​மன்ற உத்​தரவை மாற்​றியமைக்க முடி​யாது. சட்​டம் நிறைவேற்ற சட்டப்​பேர​வைக்கு அதிகாரம், தகுதி இருந்​தா​லும் அரசு நிர்​வாகத்துக்கு அத்​தகைய உரிமை இல்​லை. அரசு நிர்வாகம் ஒரு போதும் நீதி​மன்​றத்​தின் இறு​தித் தீர்ப்​புக்கு எதி​ராக செயல்பட முடி​யாது. அரசுக்கு எதி​ரான முடி​வாக இருப்​ப​தாக கூறி அதை மீறு​வதற்கு நினைத்​தால், அது சட்ட ஆட்​சி​யின் முடிவுக்கு வழி​வகுக்​கும்.

முஸ்​லிம் மதத்​துக்கு மாறிய​வர்​கள் ஏதேனும் ஒரு வகையான இடஒதுக்​கீட்​டுப் பலனை தொடர்ந்து பெறு​வதை உறுதி செய்​ய மட்​டுமே மாநில அரசு இத்​தகைய அணுகு​முறையை மேற்​கொண்​டுள்​ளது. எனவே, தமிழக பிற்​படுத்​தப்​பட்​டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை கடந்த 2024 மார்ச் 9-ம் தேதிபிறப்பித்த அரசாணை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது. அந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இதனால், முஸ்லிமாக மதம் மாறிய ஒருவர் ‘பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முஸ்லிம்’ என்ற அந்தஸ்தை கோர முடியாது. அவர் ஒரு முஸ்லிம் மட்டுமே. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மதம் மாறியவருக்கு ‘பிசி-முஸ்லிம்’ என சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணை ரத்து
அம்பாசமுத்திரம் தொகுதியில் பொதுவேட்பாளராக களமிறங்குகிறாரா சீமான்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in