தவெக வீழ்த்தும் அதிமுக விக்கெட்டுகள்... விஜய்யின் ‘பாய்ச்சல்’ அரசியல் இலக்கு என்ன?

தவெக வீழ்த்தும் அதிமுக விக்கெட்டுகள்... விஜய்யின் ‘பாய்ச்சல்’ அரசியல் இலக்கு என்ன?
Updated on
2 min read

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகி இருப்பது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக மட்டுமின்றி, ‘இது குதிரைபேர முயற்சி’ என குற்றம்சாட்டி காங்கிரஸ், விசிக மற்றும் இடதுசாரிகளும் கலக்கமடைந்துள்ளனர்.

தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வென்றாலும், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற முடியாமல் போனது தவெக தலைவர் விஜய்க்கு சங்கடத்தை கொடுத்தது. வெற்றி பெற்றாலும், ஆட்சியமைக்க முடியாமல் சில நாட்கள் போராடியது அவருக்கு நெருடலாகவே இருந்தது. ஒருவழியாக நெருக்கடியான நேரத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவளித்தன. இடதுசாரிகள் தவிர மற்றோருக்கு அமைச்சரவையிலும் இடமளித்தது தவெக.

ஒருபக்கம் மேற்கண்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தாலும், 5 ஆண்டு காலமும் இவர்கள் தயவோடே காலம் நகர்த்த முடியுமா என்ற கேள்வியும் தவெகவுக்கு இருந்தது. இதனால், ‘பிளான் பி’யாக அதிமுக அதிருப்தி அணியை அணுகினார்கள். எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பிலிருந்து 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்தனர். இவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படலாம் என பேசப்பட்டது.

ஆனால், கட்சித் தாவல் சிக்கல்கள் மற்றும் ‘தூயசக்தி’ இமேஜுக்கு பாதிப்பு வரும் என்பதால், அவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக சில நாட்களாகவே வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் கூடாரத்தில் குழப்பம் உருவானது.

இந்தச் சூழலில், வேலுமணி தரப்பின் 5 எம்எல்ஏக்கள் பழனிசாமி அணிக்கு தாவிய நிலையில், மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தவெகவில் இணைந்தனர்.

இந்த விவகாரம்தான் இப்போது பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே அமமுக எம்எல்ஏ மன்னார்குடி காமராஜை தங்கள் தரப்புக்கு மாற்றிய தவெக, இப்போது அதிமுகவில் இருந்து மூன்று விக்கெட்டுகளை தட்டித் தூக்கியுள்ளது குதிரை பேரம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இது குறித்து கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது, நம்பிக்கை வாக்கெடுப்புக்காக அதிமுகவின் ஓர் அணியை விலை பேசுவது. அமமுக உறுப்பினரை கொசுறு வாங்குவது, அதிமுக உறுப்பினர்களை பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.. இந்த மோசமான காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள் ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல எடப்பாடி பழனிசாமி, “கீழ்தளத்தில் ராஜினாமா, மேல்தளத்தில் கட்சியில் இணைப்பு என்றும் தமிழ்நாட்டில் கீழ்த்தரமான அரசியலை, குதிரை பேர கலாச்சாரத்தை தவெக அறிமுகப்படுத்தியுள்ளது” என காட்டமாக விமர்சித்துள்ளார்.

ஆனால், இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தவெக, ‘தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சிகளை தாண்டி கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் சந்தித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, ‘தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே அதை எதிர்க்கும் என்கிற இரட்டை நிலைப்பாட்டை ஒருபோதும் எடுக்க முடியாது. குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது’ எனக் கண்டித்துள்ளார்.

அதேபோல விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜியும், “3 சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் அறமற்றது; அவர்களை ஆதரிப்பது ஆபத்தானது. உண்மையான மற்றும் நேர்மையான அரசியலில் ஈடுபடுவோம் என்று தவெக தலைவர் விஜய் முன்வைக்கும் கூற்றுக்கு, இது ஓர் அச்சுறுத்தலாகும்’ எனத் தெரிவித்துள்ளார். இடதுசாரிகளும் இந்த விவகாரத்தில் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே ஆட்சிக்கு போதுமானது எனும்போது, தவெக மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை அபகரிப்பது ஏன் என்று கூட்டணிக் கட்சிகளின் மத்தியில் கேள்வியெழுந்துள்ளது. இப்போது தவெக வசம் 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஒருவேளை, திருச்சி கிழக்கு மற்றும் 3 காலியாகும் தொகுதிகளில் தவெக வென்றால் அவர்களின் பலம் 111 ஆகும். ஏற்கெனவே அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் கிட்டத்திட்ட தவெக நபராகிவிட்டார்.

எனவே, இன்னும் 6 அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்தால் தனிப்பெரும்பான்மை பெறலாம், அதன்பின்னர் யார் தயவும் தேவையில்லை என்ற கணக்கோடு தவெக செயல்படுகிறதோ என்று கூட்டணிக் கட்சினரின் மனதில் இன்னேரம் கேள்வி எழுந்திருக்கும். அதிமுகவோடு நிற்காமல், தங்கள் பக்கமுள்ள எம்எல்ஏக்களுக்கும் வலைவீசுவார்களோ என்ற பதற்றமும் மற்ற கட்சிகளிடம் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது.

எப்படி பார்த்தாலும், மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை திட்டமிட்டு இழுப்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு ஆபத்தாகவே முடியும். தமிழக அரசியலில் புதிய ‘பாய்ச்சல்’ காட்டும் தூயசக்திகள் இதனை கவனத்தில் கொண்டால் நல்லது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

தவெக வீழ்த்தும் அதிமுக விக்கெட்டுகள்... விஜய்யின் ‘பாய்ச்சல்’ அரசியல் இலக்கு என்ன?
“குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது” - காங். எம்.பி ஜோதிமணி கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in