Published : 23 May 2023 04:52 AM
Last Updated : 23 May 2023 04:52 AM

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி நாளை பணி ஓய்வு

டி.ராஜா

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த டி.ராஜா நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப். 12-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கடந்த 8 மாதங்களாக பதவி வகித்து வருகிறார். அவர் நாளையுடன் (மே 24) பணி ஓய்வு பெற உள்ளார். அவருக்கான பிரிவு உபசார விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது.

பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த டி.ராஜாவை ஏற்கெனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதல் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அவரை இடமாறுதல் செய்யக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கை மற்றும் அவரும் தனது இடமாறுதலை மறுபரிசீலனை செய்யுமாறு விடுத்த கோரிக்கை ஆகியவற்றை பரிசீலித்த மத்திய அரசு, தொடர்ந்து அவரை சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பணியாற்ற அனுமதித்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற கொலீஜியம் கடந்த ஏப். 19-ம் தேதி மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.வி.கங்கா பூர்வாலாவை, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைத்துள்ளது.

தற்போது கொலீஜியத்தின் இந்தப் பரிந்துரையை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்கா பூர்வாலா நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நீதித் துறை வட்டாரத்தில் நிலவுகிறது.

இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியான டி.ராஜா பணி ஓய்வு பெறவுள்ளதால், புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை, அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதியான எஸ்.வைத்தியநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. டி.ராஜா தனது 8 மாத பதவிக் காலத்தில், உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 13 புதிய நீதிபதிகளுக்கும், 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகவும் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x