Published : 21 May 2023 11:52 PM
Last Updated : 21 May 2023 11:52 PM

மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம்: தஞ்சாவூர் ஆட்சியர் தகவல்

மது அருந்தி உயிரிழந்த குட்டி விவேக், குப்புசாமி.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் கீழவாசலில் அனுமதி பெற்ற டாஸ்மாக் பார் செயல்பட்டு வருகிறது. இதில் மது அருந்திய மீன் வியாபாரியான குப்புசாமி (68), பூமான்ராவத்தன் கோயில் தெருவைச் சேர்ந்த கார் ஒட்டுநர் குட்டி விவேக் (36) ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இதி தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களிடம் கூறியது.

“தஞ்சாவூரில் மது அருந்தி குப்புசாமி, விவேக் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இருவரது உடல்களிலும் இருந்த சில பகுதிகள் எடுக்கப்பட்டு, தஞ்சாவூர் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த ஆய்வறிக்கையில் மெத்தனால் ஆல்கஹால் இல்லை என்பதும், சயனைடு விஷம் இருந்ததும் தெரிய வந்தது.

உயிரிழந்த விவேக்குக்கு குடும்ப பிரச்னை காரணமாக அவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விசாரணையின் முடிவில் முழு விவரமும் தெரியவரும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடனிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x