Published : 20 May 2023 11:31 AM
Last Updated : 20 May 2023 11:31 AM

டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டுகளை வாங்கக்கூடாது என்று சுற்றறிக்கை அனுப்பப்படவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

டாஸ்மாக் கடைகள்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் அப்படி எவ்வித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.

ரூ.2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது.

மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும் என்று ரிசர்வ் வங்கி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்கக் கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்றும் டாஸ்மாக் நிர்வாகம் கூறி உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இது முற்றிலும் தவறான செய்தி என்றும் இதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x