Published : 11 May 2023 06:05 AM
Last Updated : 11 May 2023 06:05 AM

25 உழவர் சந்தைகளில் ‘தொன்மைசார் உணவகங்கள்’ - வழிகாட்டுதல்களை வெளியிட்டது வேளாண் துறை

சென்னை: தமிழகத்தில் உள்ள 25 உழவர் சந்தைகளில் பாரம்பரிய உணவு வகைகளுடன் கூடிய தொன்மைசார் உணவகங்கள் அமைக்க அனுமதியளித்து அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது வேளாண் துறை.

சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ‘‘உழவர் சந்தைக்கு அதிகாலையில் காய்கறி மூட்டை, கீரைக்கட்டுடன் விவசாயிகள் வருகின்றனர். மதியம் வரை அவர்கள் விற்பனை செய்து களைத்துப் போகின்றனர். அவர்கள் தாகத்தை தீர்க்கும் வகையிலும், வயிற்றை நிரப்பும் வகையிலும், தமிழகத்துக்கே உரிய தொன்மைமிக்க ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானியக் கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகள் போன்றவற்றை வழங்கவும், நுகர்வோர் அவற்றை அருந்தி விழிப்புணர்வு பெறவும் முதல்கட்டமாக 25 உழவர் சந்தைகளில் தொன்மைசார் உணவகங்கள் தனியார் பங்களிப்பில் அமைக்கப்படும்’’ என அறிவித்தார்.

இந்நிலையில், வேளாண் வணிகத் துறை இயக்குநர் அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 183 உழவர் சந்தைகளில் 28-ல் உணவகங்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் விவசாயிகள், நுகர்வோர் பயன்பெற்று வருவதாகவும், இவற்றில் 25 உணவகங்களை தொன்மைசார் உணவகங்களாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

சிறுதானிய உணவுகள்: அதன்படி, கோயம்புத்தூர் - ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, திண்டுக்கல் - பழனி, ஈரோடு- சம்பத் நகர்,கன்னியாகுமரி - வடசேரி, கிருஷ்ணகிரி - ஓசூர், மதுரை - அண்ணாநகர், சொக்கிகுளம், நீலகிரி - ஊட்டி, ராமநாதபுரம் - பரமக்குடி, சேலம் - சூரமங்கலம், திருநெல்வேலி - பாளையங்கோட்டை, மேலப்பாளையம், திருப்பூர் - உடுமலைப்பேட்டை, திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, திருச்சி - கே.கே.நகர், வேலூர் - காட்பாடி, வேலூர் மற்றும்தேனி, புதுக்கோட்டை, பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி ஆகிய 25 உழவர்சந்தைகளில் உணவகம் அமைக்கப் படுகிறது.

மேலும், இந்த உணவகம் காலை4 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே நடத்தப்பட வேண்டும். பாரம்பரிய மற்றும் மருத்துவ குணம் கொண்ட சூப், சிறுதானிய கூழ், சுண்டல், சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய தின்பண்டங்கள் விற்கலாம். உணவகத்துக்கு இலக்கிய நயம் வாய்ந்த பெயர்கள் சூட்டப்பட்டு எழுதி வைக்க வேண்டும்.

உணவகத்தால் சந்தை விவசாயிகள், நுகர்வோருக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x