Published : 11 May 2023 06:02 AM
Last Updated : 11 May 2023 06:02 AM

போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த ஊழியர் நியமிப்பதை நிறுத்த வேண்டும் - தொழிலாளர் நலத் துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஏற்கெனவே வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இதுதொடர்பான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை, சென்னை தொழிலாளர் நலத் துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் வேல்முருகன் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் போக்குவரத்து கழக நிர்வாகங்கள் தரப்பில் பொது மேலாளர்கள் உள்ளிட்டஅதிகாரிகளும், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனபொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எம்.கனகராஜ், அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத் தலைவர் துரை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகம் விதிகளை பின்பற்றாமல் தற்காலிக ஓட்டுநர்களை தொடர்ந்துநியமிப்பதாக சிஐடியு தரப்பில்எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘இதுவரை 298 தற்காலிக ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது முழுக்க முழுக்க தற்காலிக நடவடிக்கை’ என்று விரைவு போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.

இதை தொழிலாளர் நலத் துறைஇணை ஆணையர் பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து, அவர்பேசும்போது, ‘‘பேச்சுவார்த்தையில் நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்காதது சரியல்ல. போக்குவரத்து கழக நிர்வாகங்கள் முறைப்படி விதிகளை பின்பற்றி, ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் நடவடிக்கையை நிறுத்திக் கொள்ளவேண்டும். சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கிய நிலையில், பெரும்பாலான சங்கங்கள் ஒப்பந்த தொழிலாளர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது மாநிலம் முழுவதும் நிலவும் பிரச்சினையாக இருப்பதால், தொழிற்சங்கத்தினருடன் போக்குவரத்து கழக நிர்வாகங்கள் ஆலோசனை நடத்தலாம்’’ என்றார்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை மே 31-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x