Last Updated : 09 May, 2023 05:15 PM

1  

Published : 09 May 2023 05:15 PM
Last Updated : 09 May 2023 05:15 PM

பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் சாப்பிட்ட அன்னதான இலையில் உரம் தயாரிக்க ஏற்பாடு

திண்டுக்கல்: பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளை அரைத்து கூழாக்கி உரம் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக, சென்னையில் இருந்து ரூ.14 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அதிகளில் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இங்கு வரும் பக்தர்களுக்காக 2002-ம் ஆண்டு தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பின், கடந்த 2012-ம் ஆண்டு நாள் முழுவதும் அன்னதான திட்டமாக விரிவுப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தில் தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பாயாசம், அப்பளம் மற்றும் ஊறுகாயுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஒரு பந்திக்கு 350 முதல் 450 பேர் வீதம் தினமும் 4,500 முதல் 5,000 பேர் வரை அன்னதானம் சாப்பிடுகின்றனர். கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை அதிகரிப்பால் அன்னதானம் சாப்பிடுவோரின் எண்ணிக்கையும் 7,000-ஆக அதிகரித்துள்ளது. பக்தர்கள் சாப்பிட்ட அன்னதான இலைகள் குப்பையில் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில் அதில் இருந்து உரம் தயாரிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இற்காக, ரூ.14 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரம் மற்றும் ராட்சத குழாய்கள் சென்னையில் இருந்து வாங்கப்பட்டு, பழநிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த இயந்திரத்தில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகள், காய்கறி கழிவுகளை போட்டு அரைத்து கூழாக்கி, குழாய் மூலம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட உள்ள உரத் தொட்டியில் சேமித்து உரமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x