Published : 07 May 2023 04:56 AM
Last Updated : 07 May 2023 04:56 AM

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் - செல்போன் செயலி மூலம் கண்காணிக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை, பிரத்யேக செல்போன் செயலி வழியாக கண்காணிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ரூ.33.56 கோடியில் செயல்படுத்தப்பட்டது.

அதன்படி, காலையில் உப்புமா,கிச்சடி உள்ளிட்ட சிற்றுண்டிகள்,குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஒரு லட்சத்து 14,095 பேர் பயனடைந்து வருகின்றனர்.

இதையடுத்து, அந்த திட்டத்தைதமிழகம் முழுவதும் உள்ள 30,122அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18 லட்சம் மாணவர்களுக்கு விரிவுபடுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணிகளை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அரசு அனுமதித்துள்ள உணவுவகைகளைத் தயாரிப்பது தொடர்பாக, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு 2 நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வகையான உணவு வகைகள் தயாரிக்கவும், சுகாதாரமான முறையில் சமையல் செய்யவும் பயிற்றுவிக்கப்படும். மேலும், பதிவேடுகளைப் பராமரிக்கவும் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சியை ஒவ்வொரு மையத்திலும் 3 சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு வரும் 25-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

மேலும், திட்டத்தின் பணிகளைகண்காணிப்பதற்காக பிரத்யேகசெல்போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மையங்களில் நடைபெறும் நிகழ்வுகளை மையப் பொறுப்பாளர், அந்த செயலியில் புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x