Published : 07 May 2023 07:16 AM
Last Updated : 07 May 2023 07:16 AM

தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தாமதம்: மே 9-ம் தேதிக்கு மேல் புயலாக வலுப்பெறும்

சென்னை: புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இது, 8-ம் தேதி உருவாகி, 9-ம் தேதிக்கு மேல் புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று (மே 6) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் தாக்கத்தால் வரும் 7-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தாமதமாக வரும் 8-ம் தேதி உருவாகக்கூடும். வரும் 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.

வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (மே 7, 8)சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 9, 10-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 10-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமானமழை பெய்யக்கூடும்.

மே 6-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் 14 செ.மீ., காஞ்சிபுரத்தில் 13 செ.மீ., வேலூர் மாவட்டம் அம்முண்டியில் 12 செ.மீ., திருப்பத்தூரில் 11 செ.மீ., கலசப்பாக்கத்தில் 9 செ.மீ., ராணிப்பேட்டை மாவட்டம்அம்மூரில் 8 செ.மீ., ராணிப்பேட்டையில் 7 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் புயல் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய அந்தமான் கடல்பகுதிகளில் வரும் 10-ம் தேதி வரை அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ.வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x