Published : 05 May 2023 05:29 AM
Last Updated : 05 May 2023 05:29 AM

நடிகர் மனோபாலா உடல் தகனம்: திரையுலகினர் இறுதி அஞ்சலி

உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமான நடிகரும், இயக்குநருமான மனோபாலாவின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து வளசரவாக்கம் மின் மயானத்துக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நேற்று கொண்டு செல்லப்பட்டது. படம்: பு.க.பிரவீன்

சென்னை: உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் காலமான நடிகர் மனோபாலா உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அரசியல் கட்சியினர், திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

திரைப்பட இயக்குநராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் மனோபாலா. இவருக்கு வயது 69. உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மனோபாலா, சிகிச்சைக்குப் பிறகு சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென காலமானார்.

இவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். ‘மனோபாலா மறைவு தமிழ் திரையுலகுக்கு மாபெரும் இழப்பு’ என ரசிகர்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து மனோபாலா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சி தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்களும் தொடர்ந்து வருகை தந்த வண்ணம் இருந்தனர்.

நடிகர்கள் விஜய், கவுண்டமணி, விஜய்சேதுபதி, சசிக்குமார், நாசர், பரத், பார்த்திபன், சிவக்குமார், சாந்தனு, ராதாரவி, மோகன், சேரன், சித்தார்த், ஆனந்தராஜ், தலைவாசல் விஜய், மன்சூர் அலிகான், ஆர்யா, ரமேஷ் கண்ணா, சரத்குமார், சூரி, விமல், கோவை சரளா, ராதிகா, பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சந்தானபாரதி, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, அப்புக்குட்டி, பசுபதி, யோகிபாபு, சாக் ஷி அகர்வால் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர் சி, ஆர்.கே.செல்வமணி, லோகேஷ் கனகராஜ், மணிரத்னம், லிங்குசாமி, அமீர், சமுத்திரக்கனி, மாரி செல்வராஜ், சுசீந்திரன், எச்.வினோத், ஏ.எல்.விஜய் மற்றும் சின்னத்திரை நடிகர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் அஞ்சலி: அதேபோல், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் மனோபாலா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், வெளியூர்களில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் அவரது வீட்டுக்கு வருகை தந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், மனோபாலா உடலுக்கு அவரது வீட்டில் குடும்ப வழக்கப்படி நேற்று காலை இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. பிறகு,11.30 மணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட அமரர் ஊர்தி வாகனத்தில் உடல் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலம் தொடங்கியது. கலைஞர் தெரு, அப்புசாலி தெரு, 80 அடி சாலை, ராஜமன்னார் சாலை, வன்னியர் தெரு, ஆற்காடு சாலை வழியாக வளசரவாக்கம் கேசவர்த்தினி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மின் மயானத்துக்கு மனோபாலா உடல் கொண்டு வரப்பட்டது.

அங்கு மனோபாலா உடலுக்கு, அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செய்தனர். பின்னர் சுமார் 1 மணி அளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தின்போது, வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் மனோபாலா உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x