Published : 05 May 2023 12:24 AM
Last Updated : 05 May 2023 12:24 AM

திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக கட்டப்படும் கழிப்பிடத்தின் மத்தியில் மின்கம்பம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி 41-வது வார்டு பெரியார் நகரில், ரூ. 29 லட்சம் செலவில் பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டு வருகிறது.

கழிப்பிடத்தின் மத்தியில் உயர் அழுத்த மின்கம்பம் உள்ளது. மின்கம்பத்தை அகற்றாமல் பணிகள் தொடர்வதால் அப்பகுதியினர் அதிருப்தி அடைந்துள்ளனர். மின்கம்பத்துடன் கட்டுமான பணிகள் நடந்து வருவது, அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு வேறொரு இடத்தில் கழிவறை கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. தற்போது வேறொரு இடத்தில் புதிய கழிவறை கட்டும் பணி நடந்து வருகிறது. கழிவறைக்கு மத்தியில் உயர் அழுத்த மின்கம்பம் இருப்பதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவே கருதுகிறோம். இதனை கவனத்தில் கொண்டு மின் கம்பத்தை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாநகராட்சி உதவி பொறியாளர் ராம்மோகன் கூறியதாவது: மின்வாரியத்துக்கு தகவல் ஏற்கனவே சொல்லிவிட்டோம். இது தொடர்பாக மின்வாரியம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இன்னும் 10 முதல் 15 நாட்களுக்குள் மின் கம்பத்தை மின்வாரியம் அகற்றிவிடும். அதன்பின்னர் தான் மற்ற பணிகளை தொடங்குவோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x