Published : 02 May 2023 04:27 AM
Last Updated : 02 May 2023 04:27 AM

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு. தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு - மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், மே 2, 3-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும்,4, 5-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 2-ம் தேதியும் (இன்று), மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3-ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 1-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாட்டம் சாம்ராஜ் எஸ்டேட், குன்னூர், கோவை மாவட்டம் வால்பாறையில் 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் கின்னகொரையில் 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் குந்தா பாலம், கெத்தை, பர்லியார், கோத்தகிரியில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x