Published : 24 Apr 2023 04:36 AM
Last Updated : 24 Apr 2023 04:36 AM

பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி தீவிரம்

சென்னை: தமிழகத்தில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 75 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர்.

இவர்களுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2023-24-ம் கல்வியாண்டுக்கான பாடப் புத்தகங்கள் அச்சிடும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3 கோடியே 18,066 புத்தகங்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்காக 1 கோடியே 20 லட்சத்து 93,000 புத்தகங்கள் என மொத்தம் 4.12 கோடிபாடப் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. அவற்றில் 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இதுகுறித்து பாடநூல் கழக அதிகாரிகள் கூறியதாவது: தற்போது 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் முழுமையாக அச்சிடப்பட்டு, மாவட்டக் கல்விஅலுவலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து மே மாதம் பள்ளிகளுக்கு புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும்.

அதேபோல, 1 முதல் 7-ம் வகுப்புகளுக்கான முதல் பருவப் புத்தகங்கள் அச்சிடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் வாரத்திலேயே அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் முழுமையாக வழங்கப்படும்.

மேலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனைக் கிடங்கில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x