Published : 24 Apr 2023 06:06 AM
Last Updated : 24 Apr 2023 06:06 AM

2024 மக்களவை தேர்தலில் திமுக வெற்றிக்கு துணை நில்லுங்கள்: தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: நாட்டை காப்பாற்றத் தயாராக இருக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் வெற்றிக்குத் துணை நிற்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகி மகன் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திமுக தலைவர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.

இதற்காக புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, 2024 மக்களவைத் தேர்தலுக்கான பூத் கமிட்டிகளை அமைப்பது உள்ளிட்ட இலக்குகளை முன்னெடுத்துள்ளோம். அவற்றை நிறைவேற்றினால்தான், இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.

சட்டப்பேரவை நிறைவு நாளில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரு ஆண்டுகளில் என்னென்ன பணிகளை நிறைவேற்றியுள்ளோம் என்று விளக்கினேன்.

சட்டப்பேரவைத் தேர்தல் நேரத்தில் அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நிதிநிலைப் பற்றாக்குறை, மத்திய அரசின் துணை இல்லாதது உள்ளிட்டவற்றையும் தாண்டி, நாட்டிலேயே சிறந்த மாநிலமாக, முதலிடம் பெறும் மாநிலமாக, `நம்பர் ஒன்' முதல்வர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் மாநிலமாக தமிழகம் வளர்ந்து வருகிறது.

வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளில், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்குகிறது. இவ்வாறு மகளிர் முன்னேற்றத்துக்கு பல திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதேநேரம், எக்காரணத்தைக் கொண்டும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது. மாநில உரிமைக்காக தற்போது நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், தேசிய அளவில் முழுமையாக வெற்றி பெற்றால்தான், இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்து விழாவில் பேசினார்கள். ஒரு காலத்தில் பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தவறு செய்தால், தண்ணியில்லா காட்டுக்கு அதாவது ராமநாதபுரத்துக்குத்தான் மாற்றுவார்கள். அப்படியிருந்த அந்த மாவட்டத்தை மாற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார். அவர் முதல்வராகவும், நான் துணை முதல்வராகவும் இருந்தபோது, அதற்காக நிதி ஒதுக்கி, 10 மாதங்களில் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

மக்களின் எண்ணங்களை அறிந்து, பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு கருணாநிதி எப்படி தனது கடமைகளை சிறப்பாக நிறைவேற்றினாரோ, அதே வழியில் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆட்சிக்கு நீங்கள் என்றும் துணை நிற்க வே்ணடும்.

இந்தியாவைக் காப்பாற்றுவதற்கு நீங்கள் எல்லாம் தயாராவதுடன், உங்களை ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில் திமுக அணிக்கு மிகப் பெரிய வெற்றியைத் தர தொண்டர்கள் துணைநிற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x