Published : 01 Sep 2017 09:01 AM
Last Updated : 01 Sep 2017 09:01 AM
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை பெற தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவின் இரு அணிகள் இணைந்தபோது, கட்சியின் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை தொடங்கப்படும் என்று ஆர்.வைத்திலிங்கம் எம்பி கூறினார். வரும் 12-ம் தேதி பொதுக்குழுவை கூட்ட முதல்வர் பழனிசாமி தரப்பு முடிவெடுத்துள்ளது.
இக்கூட்டத்தில், சசிகலா தரப்பினரால் சிக்கல்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரு அணிகளும் இணைந்த நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் பக்கம் அதிகம் இருப்பதை உணர்ந்தே முதல்வர் பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் இந்த முடிவை எடுத்துள்ளதாக, தினகரன் தரப்பினர் கருதுகின்றனர்.
பொதுச்செயலாளர் இல்லாத நிலையில் அவரால் நியமிக்கப்பட்ட அவைத் தலைவர், பொருளாளர், தலைமை நிலைய செயலர் உள்ளிட்ட நிர்வாகிகள்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். ஆனால், பொதுச்செயலாளர் என சசிகலா உள்ள நிலையில், அவர்தான் கூட்ட முடியும் என்று தினகரன் தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இதை சுட்டிக்காட்டி பொதுக்குழுவை கூட்டுவதற்கு நீதிமன்றத்தில் தடை பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரம், பொதுக்குழுவுக்கு தடை பெற தினகரன் தரப்பு முயலும் என்பதாலேயே, சசிகலா நியமனம் செல்லாது என்ற தீர்ப்பை தேர்தல் ஆணையத்தில் இருந்து பெற முதல்வர் பழனிசாமி தரப்பு முயற்சித்து வருகிறது. ஆனால், அப்படி தீர்ப்பு வந்தால், உடனடியாக நீதிமன்றம் செல்லவும் தினகரன் தரப்பு தயாராகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT