Published : 16 Apr 2023 05:39 AM
Last Updated : 16 Apr 2023 05:39 AM

இரண்டு அடுக்கு மெட்ரோ மேம்பால பணிக்கு பிரத்யேக ராட்சத இயந்திரம்: சீனாவில் இருந்து இறக்குமதி

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், இரண்டு அடுக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு ‘கிர்டர் லாஞ்சர்’ என்ற ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், மொத்தம் 3 வழித் தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. உயர்மட்டப் பாதை, சுரங்கப் பாதைக்கான பணிகள் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகின்றன.

மாதவரம் - சோழிங்கநல்லூர் (5-வதுவழித்தடம்), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி (4-வது வழித்தடம்) இடையேயான மெட்ரோ ரயில் பாதை சில இடங்களில் இணைகின்றன. குறிப்பாக, போரூர் சந்திப்பு, ஆலப்பாக்கம், காரம்பாக்கம், வளசரவாக்கம், ஆழ்வார் திருநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையப் பகுதிகளில் இரண்டு அடுக்கு மேம்பாலப் பாதைகள் அமைய உள்ளன.

மொத்தம் 5 கி.மீ. தொலைவுக்கு அமைய உள்ள இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு பிரத்யேக ராட்சத இயந்திரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டு அடுக்கு மேம்பாலத்தில் வெவ்வேறு வழித்தடங்களுக்கு செல்லும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதற்காக பிரம்மாண்டமான தூண்கள் அமைக்கப்படும்.

இதன் மீது 140 மீட்டர் உயரம், 22 மீட்டர் நீளத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன. இதற்கு பிரத்யேக ‘கிர்டர் லாஞ்சர்’ வகையை சேர்ந்த ராட்சத இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த இயந்திரம் 500 டன் எடை உடையது. ஒரு இயந்திரத்தின் விலை ரூ.12 கோடி. இதற்கான பாகங்களை வரவழைத்து, ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த 4 மாதங்களில் இந்த இயந்திரங்களை தயார் செய்து, பணிகளைத் தொடங்க திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x