Published : 01 Sep 2017 08:53 AM
Last Updated : 01 Sep 2017 08:53 AM

அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்ட திட்டமிடும் மோடி அரசு: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டு

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதேநேரம் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2010 முதல் 2014 வரை புதிதாக 13,000 அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டும் மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 13 லட்சம் குறைந்துள்ளது. இந்தச் சூழலில் சரியாக செயல்படாத அரசுப் பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதே அரசுப் பள்ளிகளின் பிரச்சினைக்கு காரணம். கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்துக் கொண்டேவருகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்காமல் ஏராளமான மாணவர்களை ஒரே வகுப்பில் அடைத்து வைக்கிறார்கள். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இப்படி அரசுப் பள்ளிகளை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சரியாக செயல்படாத பள்ளிகளை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக்கின் பரிந்துரை கடும் கண்டனத்துக்குரியது. அரசுப் பள்ளிகளை ஒழித்துக்கட்ட மோடி அரசு திட்டமிட்டுள்ளதையே இது காட்டுகிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x