Published : 13 Apr 2023 07:08 PM
Last Updated : 13 Apr 2023 07:08 PM

வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி மைதானத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணி: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வாணியம்பாடி அருகே அரசுப் பள்ளி மைதானத்தில் துணை சுகாதார நிலையம் அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கோணமேடு நகராட்சியில் 1952-ஆம் ஆண்டு துவக்கப் பள்ளி தொடங்கப்பட்டு, 1997-ல் நடுநிலை பள்ளியாகவும், 2001-ல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான வைப்புத் தொகை ஒரு லட்ச ரூபாயை ஊர் பொதுமக்களிடமிருந்து திரட்டி 2018-ல் அரசிடம் செலுத்தப்பட்டது.

1997-ம் ஆண்டு பள்ளி மைதானத்தில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தீயணைப்பு நிலையம் கட்டப்பட்ட நிலையில், மீதமுள்ள மைதானத்தை பள்ளிக்கூடத்தின் பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும் என நகர்மன்ற கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், பள்ளியின் மைதானத்தில் நகராட்சி துணை சுகாதார நிலையம் கட்டுவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டதால், அந்தத் திட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பணிகளுக்கு தடை விதிக்கக் கோரியும் அமரர் கக்கன் கல்வி அறக்கட்டளையின் சார்பில், அதன் தலைவர் சுதந்திர தாசன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், தமிழகத்தில் அரசு பள்ளிகள் சிறப்பாக பணியாற்ற அரசு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்துவரும் நிலையில், மற்றொருபுறம் பள்ளி வளாகத்தில் கட்டுமானங்களை உருவாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x