Published : 11 Apr 2023 04:12 PM
Last Updated : 11 Apr 2023 04:12 PM

“அன்புள்ள டானியாவுக்கு...” - பள்ளி செல்லத் தொடங்கிய சிறுமிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

முகச்சீரமைப்பு சிகிச்சைக்குப் பின்னர் பள்ளியில் சேர்ந்த சிறுமி டானியா

சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு குணமடைந்த சிறுமி டானியா பள்ளி செல்லத் தொடங்கியதையொட்டி அச்சிறுமிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள டானியாவுக்கு, பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டாய் என்றறிந்தேன். மகிழ்ச்சி. ஆசிரியர்களோடு அன்பான நண்பர்களும் உனது உயர்வுக்கு உறுதுணையாக அமைய வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வீராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், இவரதுமனைவி சவுபாக்யா. இத்தம்பதியின் மகள் டானியா (9) அரிய வகை முகச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டார். ஆகவே, தனக்கு உதவிக்கரம் நீட்டுமாறு முதல்வருக்கு சிறுமி டானியா கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு உடனடியாக சிகிச்சையளிக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, பூந்தமல்லி அருகே தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு, 8 மணி நேர தொடர் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு முக சீரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிறுமி டானியாவை சந்தித்து நலம் விசாரித்தார். பிறகு, செப்டம்பர் மாதத்தில் சிறுமி டானியா வீடு திரும்பினார்.

இந்நிலையில், முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடவும், பேச, சாப்பிடஎளிதாக வாய் திறக்கவும் சிரமப்பட்டு வந்தார். அதற்கு தீர்வு காண கடந்த ஜனவரி 5-ம் தேதி தண்டலம் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமி டானியாவுக்கு, 2-ம் கட்ட அறுவை சிகிச்சை11 மருத்துவர்கள் அடங்கிய குழுவினரால் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. சில நாட்களில் சிறுமி டானியா வீடு திரும்பினார்.

தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 8-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுமி டானியா வீட்டுக்குச் சென்று அவரிடம் நலம் விசாரித்தார். இந்நிலையில், இரு கட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்ற சிறுமி டானியா இல்லம் தேடி கல்வி மூலம் 4-ம் வகுப்பு படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து, சிறுமி டானியா மீண்டும் வீராபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று 5-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x