Published : 11 Apr 2023 05:05 AM
Last Updated : 11 Apr 2023 05:05 AM

முத்ரா கடன் திட்டம் தொடர்பாக ப.சிதம்பரம் பொய் பிரச்சாரம் - அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: முத்ரா கடன் திட்டம் தொடர்பாக ப.சிதம்பரம் பொய் பிரச்சாரம் செய்வதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “முத்ரா கடன் திட்டத்தின்கீழ் 8 ஆண்டுகளில் ரூ.23.2 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அந்த கடன்களில் 83 சதவீதம், ரூ.50 ஆயிரத்துக்கு கீழ் இருப்பதை கவனிக்க வேண்டும். அதாவது, ரூ.19,25,600 கோடி தொகை, ரூ.50 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான அளவில் கடனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த ரூ.50 ஆயிரம் கடனில் தற்போது என்ன தொழில்செய்ய முடியும் என்று யோசிக்கவைக்கிறது” என கூறியிருந்தார்.

இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது: முத்ரா கடன் குறித்த முன்னாள்மத்திய அமைச்சரின் புரிதல் தவறானது. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்ததைப் போல, நிதி வழங்காதவர்களுடன் இதை ஒப்பிடக் கூடாது.

முத்ரா கடன்கள் நடுத்தரக் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துபவை. முத்ரா கடன் திட்டத்தின் துணை திட்டங்களான ஷிஹு கடன் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் 41 சதவீதமும், கிஷோர் கடன்ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 5 லட்சம் வரை 36 சதவீதமும், தரூண் கடன்ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை 23 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழக மக்களுக்கு ரூ.2.02 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை மாவட்டத்துக்கு மட்டும் ரூ.2,447 கோடி அளவில் கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இனிமேல், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் தனது கோட்டையை விட்டு வெளியேறி, முத்ரா கடன் பயனாளிகளை சந்திப்பார் என்று உறுதியாக நம்புகிறோம்.

முத்ரா கடன் வழங்கியதில் 7 ஆண்டுகளில் வாராக் கடன் 3.3 சதவீதம் மட்டுமே. முன்னாள் மத்திய நிதி அமைச்சரே இப்படிப்பட்ட பிழையை செய்திருப்பது, வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறாரோ என யோசிக்க வைக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x