Published : 08 Sep 2017 01:49 PM
Last Updated : 08 Sep 2017 01:49 PM

விபத்துகளை தவிர்ப்பதற்காகவே அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது: தமிழக போக்குவரத்து ஆணையம்

விபத்துகளை  தவிர்ப்பதற்காகவே அசல்  ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தமிழக போக்குவரத்து ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

வாகன விபத்துகள் அதிகரித்து வருவதை ஒட்டி உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் வாகன விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவித்த தமிழக அரசு செப்.1 முதல் அதை கட்டாயமாக்கியது.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்று கூறி  தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து லாரி  உரிமையாளர் சங்கமும், ட்ரபிக் ராமசாமியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு முன்னதாக தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என ஏன் வாகன ஓட்டுநர்களை கட்டாயப்படுத்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தரர்.

 ஆனால் இதே வழக்கு முதன்மை நீதிபதிகள் இந்திரா பனர்ஜி, எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  விசாரணைக்கு வந்தபோது வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமான ஒன்றுதான் என்று உத்தரவிட்டார்கள்.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) முதன்மை நிதிபதிகள் இந்திரா பனர்ஜி, எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் " 2011 முதல் 2017 ஆகிய காலக் கட்டங்களில் மட்டும் போக்குவரத்து விபத்துகளில் 9,700 பேர் இறந்திருக்கிறார்கள். விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகதான்  அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயமாக்கப்படுகிறது. இதன் காரணமாக போலி ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறையும். இதனால் விபத்துகளும் தவிர்க்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதனை பதிவு செய்த கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x