Published : 06 Apr 2023 09:55 PM
Last Updated : 06 Apr 2023 09:55 PM

டெல்டா மாவட்டங்களில் ரூ.45 கோடியில் மேற்கூரையுடன் நெல் சேமிப்புக் கிடங்குகள்: அரசின் புதிய அறிவிப்புகள்

கோப்புப்படம்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் 65,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புக் கிடங்குகள் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் அமைக்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.6) உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் விவரம்:

  • திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் கிடங்கு வளாகத்தில் உள்ள காலி இடத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • அரியலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் தலா 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்குகள் மொத்தம் 7 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட நிதியின் கீழ் அமைக்கப்படும்.
  • பொது விநியோகத் திட்டச் செயல்பாட்டினை வட்ட அளவில் துரிதப்படுத்துவதற்கு ஏதுவாக 3 மாவட்டங்களில் மொத்தம் 8500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 3 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள், கிடங்கு அலுவலகங்கள், சுமை தூக்குவோர் ஓய்வறைகள், சுற்றுச்சுவர் , பாதுகாப்பு வேலி மற்றும் சாலை வசதிகளுடன் 15 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் கட்டப்படும்.
  • டெல்டா மாவட்டங்களில் 65,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புக் கிடங்குகள் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு நிதியுதவியுடன் அமைக்கப்படும்.
  • செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் 52,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புக் கிடங்குகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
  • சென்னையில் கோபாலபுரம் மற்றும் அண்ணா நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இரண்டு அமுதம் பல்பொருள் அங்காடிகள் பொதுமக்களின் வசதிக்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மேம்படுத்தப்படும்.
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மதுரை மண்டல அலுவலகத்தின் பழைய கட்டடத்தை அகற்றி அந்த இடத்தில் மண்டல அலுவலகம், அமுதம் நியாயவிலைக் கடை மற்றும் அமுதம் பல்பொருள் அங்காடி ஆகியவற்றை உள்ளடக்கிய புதிய அடுக்குமாடிக் கட்டடம் 11 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
  • 2023 ஆம் ஆண்டு ஐநா சபையால் சர்வதேச சிறுதானிய ஆண்டாகக் கடைபிடிக்கப்படுவதனை முன்னிட்டு பாரம்பரிய சிறுதானிய உணவு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
  • நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட இன்றியமையாப் பண்டங்களின் இயக்கம் மற்றும் விநியோகம் துரிதக் குறியீடு (QR Code) உதவியுடன் கண்காணிக்கும் முறை முதற்கட்டமாக 62 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் செலவினத்தில் செயல்படுத்தப்படும்.
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 மற்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள், 2017 தொடர்பாக பொது விநியோகத் திட்டத்தினைச் செயல்படுத்தும் அரசுத்துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி 71 லட்சத்து 40 ஆயிரம் செலவில் வழங்கப்படும்.
  • குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையில் வெளி முகமை மூலம் பணியமர்த்தப்படும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதிய நிர்ணயத்தினை 6000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x