Published : 05 Apr 2023 06:16 AM
Last Updated : 05 Apr 2023 06:16 AM

வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நாளை தொடக்கம்

சாத்தூர்: வெம்பக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நாளை (ஏப்.6) தொடங்குகின்றன. வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் மேட்டுக்காட்டில் 25 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வுப் பணிகள், கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெற்றன.

இங்கு, இரும்பு காலத்தில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிக அளவில் கிடைத்தன. மேலும், நுண்கற்காலக் கருவிகள், பல வகையான பாசிமணிகள் மற்றும் சுடுமண்ணாலான காதணிகள், பொம்மைகள் உட்பட 3,200-க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன.

அதைத் தொடர்ந்து, தற்போது 2-ம் கட்ட அகழாய்வுப் பணிக்கு மத்திய-மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. 2-ம் கட்ட அகழாய்வுப் பணிக்காக சுமார் 3 ஏக்கர் நிலம் அப்பகுதியில் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக அவ்விடத்தை சுத்தம் செய்யும் பணி முடிக்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட அகழாய்வுப் பணி நாளை (ஏப்.6) தொடங்கப்படுகிறது. இது குறித்து வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணி இயக்குநர் பொன் பாஸ்கர் கூறியதாவது:

முதல்கட்ட அகழாய்வுப் பணிகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் மூலம், இப்பகுதியின் தொன்மையை அறிய முடிகிறது.

முதல் கட்ட அகழாய்வு மாதிரி மற்றும் சேகரிக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் விருதுநகரில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் அரங்கு அமைத்து காட்சிப்படுத்தப்பட்டன. இதை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து, அகழாய்வு மேற் கொள்ளப்பட்ட வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டு பகுதியையும் ஏராளமான மாணவ, மாணவியர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித் ததைத் தொடர்ந்து, 2-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நாளை (6-ம் தேதி) தொடங்குகின்றன. இதன்மூலம், மேலும் பல அரிய பொருட்கள் கிடைக்கும் எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x