Published : 01 Apr 2023 06:24 AM
Last Updated : 01 Apr 2023 06:24 AM

பாஜகவை பார்த்து பயப்படப் போவதில்லை; மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம்: முகுல் வாஸ்னிக் உறுதி

தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக் ட்டம், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமையில் ச ன்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே .எஸ்.அழகிரி, தேசிய செயலாளர் ஸ்ரீ வல்லபிரசாத், சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட எம்.பி.க்க ள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். | படம்: ம.பிரபு |

சென்னை: ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ பாஜகவை பார்த்து பயப்படப் போவதில்லை. மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம் என்று காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தகுதி இழப்பு விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, தமிழக காங்கிரஸ் மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் தலைமை தாங்கி னார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தேசிய செயலாளர் ஸ்ரீவல்லபிரசாத், எம்.பி.க்கள் சு.திருநாவுகரசர், செல்லக்குமார், விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘பாஜகவின் ஜனநாயக படுகொலை’ என்ற புத்தகத்தை முகுல் வாஸ்னிக் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் அதானியின் முறைகேடு குறித்து ராகுல் காந்தி உரையாற்றி 9 நாட்களுக்கு பின்னர், அவர் மீதான அவதூறு வழக்குஉயிர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்டதால், பின் தங்கிய வகுப்பினரை ராகுல் காந்தி குறி வைப்பதாக கூறி பொய் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இது பாஜகவின் மற்றொரு திசை திருப்பும் உத்தி. இந்தியஒற்றுமை பயணத்தை நடத்திய ஒருவரால் எப்படி குறிப்பிட்ட சமூகத்தை குறிவைக்க முடியும்.

அவதூறு வழக்கில், குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணி நேரத்தில் ராகுல் காந்தியின் எம்பி பதவி மின்னல் வேகத்தில் பறிக்கப்பட்டது. அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம்அளித்தும், தகுதி இழப்பு செய்வதற்கு அவசரம் காட்டியது ஏன்? ராகுல் காந்தியை பார்த்து பாஜக பயப்படுவதற்கு காரணம் என்ன? அதானிக்காக ஜனநாயகத்தை அழிக்க பிரதமர் மோடி தயாராகி விட்டார். தற்போது நாட்டின் ஜனநாயகத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் மிகப்பெரிய ஆபத்து வந்திருக்கிறது. இதை பாதுகாக்க காங்கிரஸ் கட்சி அனைத்தையும் செய்யும்.

திருடர்களையும் முறைகேடு செய்தவர்களையும் அம்பலப்படுத்திய ராகுல் காந்தியை தற்போது பாஜக குறி வைக்கிறது. இதைக் கண்டு, ராகுல் காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ பயப்படப் போவதில்லை. மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்புவோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x