Published : 30 Mar 2023 01:53 PM
Last Updated : 30 Mar 2023 01:53 PM

விழுப்புரத்தில் இஸ்லாமியர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: பேரவையில் முதல்வர் விளக்கம்

பேரவையில் விளக்கம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு மரணம் அடைந்தது தொடர்பாக பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார். அதில், "விழுப்புரத்தில் இஸ்லாமிய நபர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பற்றிய அந்தச் செய்தியை, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் சிவக்குமார் இந்த அரசினுடைய கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நான் தங்கள் வாயிலாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய சரகம், G.R.P தெருவைச் சேர்ந்தவரும், எம்.ஜி ரோட்டில் பழக்கடை நடத்தி வருபவருமான ஞானசேகர் என்பவருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகர், வல்லரசு என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், ஞானசேகருக்கு வேறோரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதாகவும், அதனால் பழக்கடையில் வரும் வருமானத்தைக் குடும்பத்திற்குத் தருவதில்லை என்றும், சாந்தி தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, 29-3-2023 அன்று மாலை, ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகியோர் தனது தந்தையிடம் இதுகுறித்து கேட்க பழக்கடைக்குச் சென்றபோது, அங்கு அவர் இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் கேட்டு பிரச்சினை செய்திருக்கிறார்கள். அப்போது அப்பிரச்சினையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜாசேகர் ஆகியோர் கத்தியால் குத்தி, காயம் ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இச்சம்பவத்தில் காயம்பட்ட இப்ராஹிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லக்கூடிய வழியில் உயிரிழந்திருக்கிறார்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். காவல் துறையினர் மேல் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தனிப்பட்ட குடும்பப் பிரச்சினையின் காரணமாக ஏற்பட்ட தகராறின்போது, அங்கு தடுக்க வந்த நபர், துரதிருஷ்டவசமாக தாக்குதலுக்கு உள்ளாகி, உயிரிழந்திருக்கக்கூடிய சம்பவம் என்பதைத் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x