Published : 26 Sep 2017 08:40 AM
Last Updated : 26 Sep 2017 08:40 AM
அப்போலோ மருத்துவமனையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் பார்க்க வந்தபோது ஜெயலலிதா சுய நினைவோடு இல்லை என அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘‘மருத்துவமனையில் ஜெயலலிதாவை சசிகலா குடும்பத்தினர் தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என்று நாங்கள் கூறியது அனைத்தும் பொய். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. பொய் சொன்ன அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கட்டை விரலை உயர்த்தினார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவைப் பார்க்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2-வது முறை வந்தபோது, ஜெயலலிதா தனது கட்டை விரலை உயர்த்தி காட்டினார். பதிலுக்கு ஆளுநரும் அப்படி செய்தார் என டாக்டர் பாலாஜி கூறியிருந்தார்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று பேட்டி அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக், ‘‘ஆளுநர் பார்க்க வந்தபோது ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்தி காட்டியதாகக் கூறப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது. அப்போது ஜெயலலிதா சுயநினைவுடன் இல்லை. மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் 3 நாட்கள் மட்டுமே அவர் சுயநினைவுடன் இருந்தார். ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அந்த நேரத்தில் நானும் மருத்துவமனையில் இருந்தேன்’’ என தெரிவித்துள்ளார்.
தீபக்கின் இந்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT