Published : 20 Mar 2023 06:34 AM
Last Updated : 20 Mar 2023 06:34 AM

யாழ்ப்பாணம் - காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை: ஏப்ரல் 29-ல் தொடங்குவதாக இலங்கை அறிவிப்பு

காரைக்கால் துறைமுகம்.

ராமேசுவரம்: யாழ்ப்பாணம் - காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஏப்.29-ல் தொடங்கும் என்று இலங்கையின் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறை இலங்கையின் பிற பகுதிகளை இணைக்கும் முக்கிய இடமாகவும், இந்தியாவுக்கு மிக அருகில் நாகை மற்றும் காரைக்கால் பகுதிக்கு 56 கடல் மைல் (100 கி.மீ) தொலைவில் உள்ள துறைமுகம் ஆகும்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது விடுதலைப் புலிகளின் கப்பல் படையை வீழ்த்துவதற்காக, அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் காங்கேசன்துறை துறைமுகம் பலத்த சேதமடைந்தது.

இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அதிகம் வாழும் வடமாகாணத்தின் வளர்ச்சி பணிக்கு உதவ வேண்டும் என்று இந்தியா கொண்டுள்ள உறுதிப்பாட்டின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலுள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு 2018-ல் ரூ.287 கோடி நிதியுதவியை அளித்தது.

இந்த நிதியுதவி மூலம் காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக ரீதியிலான பயன்பாட்டுக்கும், சரக்குக் கப்பல்களைக் கையாளவும், பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இந்தியர்கள் அதிகளவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களின் வசதிக்காக யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலுக்கு, யாழ்ப்பாணத்தின் காங்கேசன் துறையிலிருந்து பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்க இலங்கை அரசு, மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடந்த இலங்கை கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில், யாழ்ப்பாணம்-காரைக்கால் பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் காங்கேசன் துறையிலிருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் சேவை ஏப். 29-ல் தொடங்கப்படும். முதற்கட்டமாக 120 பயணிகள் வரை பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயணியும் தலா 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துசெல்லலாம். கட்டணமாக இலங்கை ரூபாயில் 40 ஆயிரம் (இந்திய மதிப்பு ரூ.9878) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, காரைக்காலில் இருந்து காங்கேசன் துறைக்கு 5 நிறுவனங்கள் கப்பல் போக்குவரத்தைத் தொடங்க விண்ணப்பித்திருந்தன. இதில் ஐ.என்.டி.எஸ்.ஆர்.ஐ. என்ற நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x