Last Updated : 10 Mar, 2023 11:41 PM

 

Published : 10 Mar 2023 11:41 PM
Last Updated : 10 Mar 2023 11:41 PM

கோவை கார் வெடிப்புச் சம்பவம் - கைதான 5 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக, அவ்வழக்கில் கைதானவர்களில் 5 பேரை காவலில் எடுத்து, கோவையில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி அதிகாலை கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த அதேபகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். இ்ச்சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முபின் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்றும், பொதுமக்கள் கூடியிருக்கும் கூட்டபகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயன மூலப் பொருட்கள், ஐஎஸ் ஆதரவு வாசகங்க் அடங்கிய பலகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான், முகமது தவுபீக்(25), உமர் பாரூக்(28), பெரோஸ்கான்(28) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தங்களது காவலில் எடுத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு பொறுப்பேற்று, அது தொடர்பாக ஐஎஸ் ஆதரவான வாய்ஸ் ஆஃப் கொரசான் என்ற பத்திரிகை இதழின் சார்பில் டார்க் வெப்சைட் வலைதளத்தில் 60 பக்க அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கும் ஐஎஸ் பொறுப்பேற்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், கார் வெடிப்பு சம்பவத்தில் முன்னரே கைது செய்யப்பட்டிருந்தவர்களில் முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ்கான் ஆகிய 5 பேரை 7 நாள் காவலில் என்.ஐ.ஏ அதிகாரிகள் எடுத்தனர்.

பின்னர், இன்று (மார்ச் 10-ம் தேதி) காலை 5 பேரையும் கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள தற்காலிக என்.ஐ.ஏ அலுவலகத்தில் வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் 5 பேரிடமும் விசாரித்தனர்.

கார் வெடிப்புச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான விவரங்கள் குறித்து விசாரித்தனர். மேலும், சமீபத்தில் வெளியான ஐஎஸ் அமைப்பின் 60 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் தொடர்பாகவும் மேற்கண்ட 5 பேரிடமும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்தனர். தொடர்ந்து இவர்களை கோட்டைமேடு, உக்கடம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், சதி திட்டம் தீட்டிய சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கும், குன்னூருக்கும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x