Published : 09 Mar 2023 06:20 PM
Last Updated : 09 Mar 2023 06:20 PM
சென்னை: ‘ஜகஜால கில்லாடி’ படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய 4 கோடி ரூபாயை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்த் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுவிஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தை தயாரிப்பதற்கு கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகினர்.
பல்வேறு தவணைகளில் 4 கோடி ரூபாய் கடன் பெற்ற நிலையில், 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் எனவும், படத்தின் அனைத்து உரிமைகளை வழங்க வேண்டுமெனவும், 2018 அக்டோபருக்குள் படத்தை முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், கடன் தொகையை திருப்பி தராததை அடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜை மத்தியஸ்தராக நியமிக்கக் கோரி தனபாக்கியம் எண்டபிரைசஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
அதன் மனுவில், "2022 ஜூலை மாதம் வரை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 41 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால் 41 லட்சத்து 85 ஆயிரம் மட்டுமே வட்டியாக செலுத்தி உள்ளனர்.நோட்டீசுக்கு பதிலளிக்காமலும், சமசர பிரிவு ஒப்பந்தத்தை ஏற்காமலும் ஈசன் நிறுவனம் செயல்படுகிறது. நோட்டீஸ் அனுப்பியும், துஷ்யந்த் நிறுவனம் தரப்பில் உரிய பதிலளிக்கவில்லை. கடன்கொடுக்கும் எண்ணம் முதலில் இல்லை. சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் அவரது குடும்ப நற்பெயரை மனதில் கொண்டே கடன் கொடுத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஈசன் பட நிறுவனம், துஷ்யந்த், அபிராமி மற்றும் ராம்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 23ம் தேதி தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT