Last Updated : 07 Mar, 2023 09:21 PM

 

Published : 07 Mar 2023 09:21 PM
Last Updated : 07 Mar 2023 09:21 PM

கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு: காவல் துறை

கோவை கார் வெடி சம்பவம் | கோப்புப்படம்

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மாநகரில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 200 பேரின் நடவடிக்கையை போலீஸார் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு, கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டி வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த முபினின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயனங்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் அடங்கிய தாள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அமைப்பினர் மேற்கண்ட கார் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கார் வெடிப்புச் சம்பவம் தீவிரவாத சதிச்செயல் என விசாரணையில் தெரியவந்தது. ஆனால், எந்த தீவிரவாத அமைப்பும் இச்சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாகவும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவம், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் ஆகியவற்றுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவான வாய்ஸ் ஆஃப் கொரசான் பத்திரிகை என்ற இதழின் சார்பில், டார்க் வெப்சைட் வழித்தடத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் இடம் பெற்றுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பான விவரங்களை என்ஐஏ-க்கு தெரியப்படுத்தியுள்ள கோவை மாநகர போலீஸார், தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியோடு அறிக்கை வெளியிடப்பட்ட பின்புலத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை கார் வெடிப்பு, மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பேற்பதாகவும், எங்கள் அமைப்பின் ஆதரவரவாளர்கள் தென்னிந்திய மாநிலங்களில் உள்ளனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கோவையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களை கண்டறிந்து, அவர்களின் நடவடிக்கையை போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதுதொடர்பாக மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘கோவை கார் வெடிப்புச் சம்பவத்துக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பதாக, அந்த அமைப்பின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் ஐஎஸ் ஆதரவு எண்ண ஓட்டத்தில் உள்ள நபர்களின் விவரங்களை சேகரித்து உள்ளோம்.

அதன்படி 200 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 20 பேர் அதிதீவிர ஐஎஸ் ஆதரவாளர்கள். மீதமுள்ள 180 பேர் தீவிர ஐஎஸ் ஆதரவாளர்கள். இவர்கள் ஒவ்வொருவரையும் ரகசியமாக போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தினமும் இவர்கள் எங்கெங்கு செல்கின்றனர், யாரை சந்திக்கின்றனர் என்பது போன்ற அனைத்து விவரங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் செல்போன் எண்கள், சமூக வலைதளப் பக்கங்கள், அதில் தொடர்பில் உள்ளவர்கள் என்பது போன்ற அனைத்து விவரங்களும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x