Published : 13 Sep 2017 09:39 AM
Last Updated : 13 Sep 2017 09:39 AM

‘தி இந்து’-வின் ‘யாதும் தமிழே’ 5-ம் ஆண்டுவிழாவில் தமிழோடு விளையாட அழைக்கிறார் ஜெகன்

‘‘ஜெகன் உங்களுக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம்…?’’

வரும் செப்டம்பர் 16-ம் தேதி சென்னை, சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியின் சர்.முத்தா கான்செர்ட் ஹாலில் நடக்கவிருக்கும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் 5-ம் ஆண்டு தொடக்க விழாவில் ‘தி இந்து’வின் ‘யாதும் தமிழே’ விழாவில் ‘தமிழோடு விளையாடு’ நிகழ்ச்சியை நடத்தவிருக் கும் நடிகர் ஜெகனிடம் இப்படிக் கேட்டதுதான் தாமதம்... அவரிடமிருந்து தமிழ் ஆனந்தமாகப் பொங்கிப் பிரவாகம் எடுத்தது.

அணுவோடு கலந்த தமிழ்

“என்னங்க இப்படிக் கேட்டுட்டீங்க, தமிழ் என் அணுவோடு கலந்தது. 2-வது படிக்கிறப்பவே திருவாசகத்தை முழுமையாகப் படித்தவன் நான். ‘நமச்சிவாய வாழ்க... நாதன்தாள் வாழ்க...’ என்று அப்போதே என் தாத்தா திருவாசகத்தைக் கரைத்துக் குடிக்க வைத்தார்.

சென்னை, ராயப்பேட்டை வெங்கடேஸ்வரா பள்ளியில்தான் படித்தேன். பள்ளி நாட்களில் தமிழ்தான் என்னுடைய பிடித்தமான பாடமாக இருந்தது. என் தமிழ் ஆசிரியர் ஆனந்தவள்ளி என்னைப் பார்த்து, ‘இவன் மட்டும் எப்படி தமிழ் படிக்கிறான் பாருங்க, கையெழுத்து கண்ணுல ஒத்திக்கலாம்போல இருக்கு’ன்னு எல்லோரிடமும் பெருமையாகக் காட்டுவார்.

படிப்பை முடித்துவிட்டு, விளம்பரத் துறையில் சுமார் 12 ஆண்டுகள் இருந்தேன். அப்போது விளம்பரங்களை ஆங்கிலத்தில் தயார் செய்து, பின்பு தமிழ்ப்படுத்துவார்கள். தமிழ் படாதபாடு படும். முதன்முதலாக விளம்பரங்களை நேரடியாக தமிழில் தயாரித்து வெளியிட்டேன். மக்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பின்பு ஆர்.ஜே., வி.ஜே-ன்னு வேலைப் பார்த்தேன். அங்கும் மளமளவென சுத்தமான தமிழில் புகுந்து விளையாடினேன். இந்தத் தமிழ்தான் முதன்முறையாக வெளியுலகத்துக்கு என்னை அடையாளம் காட்டியது.

இப்படித்தான் தொலைக்காட்சியிலும் திரைத்துறையிலும் வாய்ப்புகள் கிடைத்தன. இன்று நடிகனாக ஓரளவு பேருடனும் புகழுடன் இருக்கிறேன் என்றால் இந்த அடையாளத்தைக் கொடுத்தது தமிழ்தான். இன்றும் தினசரி குறைந்தது இரண்டு புத்தகங்களாவது படித்துவிடுகிறேன். எனது வீட்டிலிருந்த நூலகத்தைப் பார்த்த நடிகர் சூர்யா, ‘‘இவ்வளவு புத்தகம் படிக்கிறீயா, சிட்டி’’ என்று ஆச்சரியப்பட்டார்.

தி.ஜ., லா.ச.ரா. கி.ராஜநாராயணன் இவர்களை எல்லாம் படிக்கும்போது தமிழ்த் திரையுலகில் கதைக்காக ஏன் அறை போட்டு யோசிக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றும்.

மொழியின் தன்மை மாறவேண்டும்

தமிழ் மொழி எனக்குப் பிடிப்பதற்கான காரணங்களில் ஒன்று, அதன் வட்டாரத் தன்மை. ‘ஒவ்வொரு 50 கி.மீட்டர் தூரத்துக்கும் ஒரு மொழியின் தன்மை மாறவேண்டும். அதுதான் வளமான மொழி’ என்பார் மறைந்த ‘வார்த்தைச் சித்தர்’ வலம்புரி ஜான். தமிழுக்கு அது முழுமையாகப் பொருந்தும். சென்னை ராயப்பேட்டை, பார்டர் தோட்டத்தில் பேசும் தமிழ் சாந்தோம், மாட்டாங்குப்பம், அயோத்திகுப்பத்தில் மாறுபடும். ஒரு பகுதியின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள், தொழில் உள்ளிட்டவற்றை உள்வாங்கி வெளிப்படுவதுதான் வட்டார மொழி வழக்கு. அதுவே ஒரு மொழிக்கு வளம் சேர்க்கும்.

வரும் 16-ம் தேதி ‘தி இந்து’-வின் ‘யாதும் தமிழே’ நிகழ்ச்சியில் தமிழோடு விளையாடப் போகிறேன். நேரில் வாருங்கள்... என்னோடு சேர்ந்து நீங்களும் தமிழோடு விளையாடலாம்!’’ என்றார்.

விவரங்களுக்கு:

www.yaadhumthamizhe.com

பதிவுக்கு: SMS,THYTYour Name

Your AgeEmail id to 80828 07690.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x