Last Updated : 01 Mar, 2023 11:57 PM

 

Published : 01 Mar 2023 11:57 PM
Last Updated : 01 Mar 2023 11:57 PM

அடுத்த 25 ஆண்டுக்கான வளர்ச்சியை சிந்தித்து பிரதமர் செயல்படுகிறார் - காமராசர் பல்கலை., விழாவில் பிஹார் ஆளுநர் பேச்சு

மதுரை: அடுத்த 25 ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சிகளை சிந்தித்து, அதை நோக்கி பிரதமர் மோடி செயல்படுகிறார் என, காமராசர் பல்கலைக்கழக ஆவணப்படத் திருவிழா தொடக்க விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் பேசினார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம், டெல்லி தேசிய கல்வித் தொடர்புக்கான கூட்டமைப்பு மற்றும் கல்விப் பல் ஊடக ஆய்வு மையம் (இஎம்ஆர்சி) ஆகியவை இணைந்து 14வது பிரக்கிரிதி 3 நாள் சர்வதேச ஆவண திரைப்படத் திருவிழாவை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடத்த ஏற்பாடு செய்தன. இதற்கான தொடக்கவிழா இன்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் வரவேற்றார். கல்வித் தொடர்புக்கான கூட்டமைப்பு இயக்குநர் ஜகத் பூஷன் நட்டா தலைமை வகித்தார்.

பீகார் ஆளுநகர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் திருவிழாவை தொடங்கி வைத்து பேசியதாவது: இந்த ஆவணப்பட திருவிழா டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும். இக்கல்வி முறையால் காகிதம் உற்பத்தி தேவை அதிகம் இருக்காது. கோவா மாநில சட்டசபை சபாநாயகராக இருந்தபோது, 40 எம்எல்ஏக்கள் பங்கேற்ற 15 நாள் கூட்டத்தொடர் முழுவதும் காகிதம் பயன்பாடு இல்லாத நிகழ்வாக நடத்தப்பட்டது.

இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 234 எம்எல்ஏக்களை கொண்டு அடிக்கடி கூட்டத் தொடர் நடக்கிறது. இங்கு காகிதம் இல்லாத நடைமுறை கொண்டு வந்தால் பல கோடி மரங்கள் பாதுகாக்கப்படும். சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இந்த அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது

இதன்மூலம் டிஜிட்டல் கல்வி முறையும் பிரபலமாகிறது. நமது கலாச்சாரங்களை அறிய ஆவணப்படங்கள் உதவியாக இருக்கும். இவ்விழாவிற்கு 80 ஆவணப்படங்கள் பரிசீலனைக்கு வந்து இருக்கின்றன. இதில் சிறந்த 20 ஆவணப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு மேடையில் இருப்பவர்களைவிட, படைப்பாளிகள் தான் முக்கியமானவர்கள். தற்சார்பு இந்தியாவை உருவாக்க, புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுக்கான வளர்ச்சியை சிந்தித்து பணியாற்றுகிறார். நமது அடுத்த தலைமுறையினர் என்ன செய்தனர் என்ற கேள்வி எழும் நிலைக்கு நாம் ஆளாகி விடக்கூடாது" என்றார்.

இத்திருவிழாவில், பல்வேறு விருதுகள் பெற்ற சிறந்த 20 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையிடப்படுகின்றன. சர்வதேச பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர். நடுவர்கள் மூலம் சிறந்த படங்களுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. இத்திருவிழா மார்ச் 3ம் தேதி வரை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x