Published : 27 Feb 2023 08:07 PM
Last Updated : 27 Feb 2023 08:07 PM

பேரவையில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அருகருகே அமர்வார்களா? - அப்பாவு பதில்

தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு | கோப்புப் படம்

சென்னை: "சட்டமன்றம் என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமை. அதன் அடிப்படையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில், தகுதியான இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது" என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, 2023-24 ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கை மார்ச் 20-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தாக்கல் செய்யவிருப்பதாக தெரிவித்தார். அப்போது, எதிர்க்கட்சி தலைவர் இருக்கை முடிவு செய்யப்பட்டுவிட்டதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்த விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னர், முடிவை அறிவிப்பேன் என்று எப்போதுமே கூறியது இல்லை. சட்டமன்றத்தில் அந்தப் பிரச்சினை குறித்து பேசி இறுதி முடிவெடுக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவைத் திரும்பத் திரும்ப பேசுவதற்கு ஒன்றுமில்லை" என்றார்.

அப்போது சட்டமன்றத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அருகருகே அமர்வார்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, "அப்படி நான் சொல்லவில்லை. சட்டமன்றத்தில் எப்படியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்களோ அதன்படி நடக்கும்" என்றார்.

அப்போது சட்டமன்றத்தில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவு தொடருமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் முடிவுக்குப் பிறகுதான் சட்டமன்றத்தில் நான் என்றாவது சொல்லியிருக்கேனா?

சட்டமன்றம் என்னுடைய ஆளுகைக்கு உட்பட்டது. யார் யாரை எங்கு உட்கார வைக்க வேண்டும் என்பது என்னுடைய உரிமை. அதன் அடிப்படையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில், தகுதியான இடங்கள் வழங்கப்பட்டிருக்கிறது" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x