Published : 27 Feb 2023 07:58 PM
Last Updated : 27 Feb 2023 07:58 PM

விழுப்புரம் ஆசிரமத்தில் மாயமான 70 வயது முதியவர் இறந்திருக்கலாம்: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் | கோப்புப்படம்

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் இருந்து காணாமல்போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என்று சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே குண்டலபுலியூர் கிராமத்தில் ஜூபின்பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரம் என்ற மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில், திருப்பூரைச் சேர்ந்த சலீம்கான் என்பவர் அமெரிக்க செல்வதற்கு முன்பு ஷபீருல்லா என்ற தனது 70 வயது மாமாவை அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார்.

சலீம்கான் தனது நண்பர் ஹலிதீன் மூலம், மாமா ஷபீருல்லாவைச் சந்தித்து அவரது நலம் விசாரித்து தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த டிசம்பர் 4-ம் தேதி ஹலிதீன், அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு சென்ற போது ஷபீருல்லாஅங்கு இல்லை. அவர் பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இருப்பதாக ஆசிரமத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், பெங்களூரு சென்று பார்த்தபோது, அங்கும் ஷபீருல்லாஇல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து சபீருல்லாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஹலிதீன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், "ஷபீருல்லா குறித்த விபரங்களை சம்பந்தப்பட்ட அன்பு ஜோதி இல்ல நிர்வாகிகள் தர மறுக்கின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தால் அந்தப் புகாரை ஏற்க காவல் துறையினரும் மறுக்கின்றனர்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த மனு நீதிபதி சுந்தர் மற்றும் நிர்மல்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஷபீருல்லா காணாமல் போன வழக்கு தொடர்பாக சிபிசிஐடியின் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.அதில், அன்பு ஜோதி ஆசிரமத்தில் சேர்க்கபட்ட ஷபீருல்லா, பெங்களூருவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கபட்டுள்ளார். அங்கிருந்து அவர், தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், பெங்களூருவில் உள்ள பத்ராவதி, என்னுமிடத்தில் உள்ள மசூதியின் முன் கண்டெடுக்கப்பட்ட முதியவர் ஒருவரின் சடலம், ஷபீருல்லாகானின் அடையாளங்களுடன் ஒத்துபோகிறது. அந்த உடல் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.மேலும் ஷபீருல்லாவின் புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. மனுதாரர் நேரில் வந்து அடையாளம் காட்டவேண்டும்" என தெரிவிக்கபட்டிருந்தது.

இதையடுத்து, சலீம் கான் நேரில் வந்து அடையாளம் காட்டுவது தொடர்பாக விளக்கமளிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.மேலும், ஆசிரமத்தைச் சேர்ந்த எட்டு பேர் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்கப்படுவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்ற நீதிபதிகள், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x