Published : 22 Feb 2023 06:20 AM
Last Updated : 22 Feb 2023 06:20 AM

நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாவிட்டால் அதிகாரிகள் ஆஜராக நேரிடும்: பள்ளிக்கல்வி துறைக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்த பலர், தங்களை பகுதி நேர ஊழியர்களாக கருத்தில் கொண்டு பணப்பலன்களை வழங்கவும், பதவி உயர்வு வழங்கவும் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை உத்தரவை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றஅவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தமனுக்களை, நீதிபதி தண்டபாணி விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நிறைவேற்றப்படாதது தொடர்பாக 2018, 2019, 2020-ம்ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றி உரிய கல்வித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தவறினால் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், முதன்மை கணக்காயர், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை பிப்.24-க்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x