Published : 20 Feb 2023 01:56 PM
Last Updated : 20 Feb 2023 01:56 PM

குளித்தலை அருகே கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு

கபடி போட்டியில் பங்கேற்ற போது உயிரிழந்த மாணிக்கம் | கோப்புப் படம்.

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கணக்குப்பிள்ளையூரில் கபடி போட்டியில் பங்கேற்ற வீரர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் பாளையம் அருகேயுள்ள காசக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் மகன் மாணிக்கம் (26). கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தங்கவேல் இறந்துவிட்டார். இதையடுத்து தாய் மற்றும் சகோதரியுடன் மாணிக்கம் வசித்து வந்தார். கரூரில் உள்ள ஏற்றுமதி ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் மாணிக்கம் வேலை பார்த்து வந்தார்.

வெற்றிக்கோப்பையுன் மாணிக்கம் | கோப்புப் படம்.

கபடி வீரரான இவர் இப்பகுதிகளில் நடக்கும் கபடி போட்டிகளில் பங்கேற்று பல்வேறு கோப்பை, பரிசுகளை வென்றுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள கணக்கப்பிள்ளையூரில் நேற்று நடைபெற்ற கபடி போட்டியில் மாணிக்கம் பங்கேற்று முதல் இரண்டு சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று 3வது சுற்றுப் போட்டிக்காக காத்திருந்த நிலையில் திடீரென இரவு 11 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

சக கபடி வீரர்களுடன் மாணிக்கம் | கோப்பு படம்

நெஞ்சு வலிப்பதாக நண்பர்களிடம் மாணிக்கம் கூறியதை அடுத்து அருகேயுள்ள அய்யர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

குளித்தலை போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கபடி போட்டியில் பங்கேற்ற 26 வயது இளைஞர் மாரப்படைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x