Published : 20 Feb 2023 08:31 AM
Last Updated : 20 Feb 2023 08:31 AM

கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை: திமுகவை கண்டித்து நாளை பாஜக உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரி: ராணுவ வீரரை கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து நாளை தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள்விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பாஜக பட்டியலினப் பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அவருக்கு இருப்பதை எடுத்துச் சொல்லி, அவரின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய காவலரை நியமிக்க வேண்டி, காவல் உயர் அதிகாரியிடம், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லை. மதுவால் ஏற்படும் தீமைகளை அறிந்திருந்தும், அதிலிருந்து கிடைக்கும் தனிப்பட்ட கொள்ளை லாபத்துக்காக, மக்களை மதுவுக்கு அடிமைகளாக, இந்த திமுக அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் 9-ம் வகுப்பு மாணவன், மது அருந்திவிட்டு வகுப்புக்கு வந்ததாக, மாவட்ட ஆட்சியரே, மனம் திறந்து பேசி இருக்கிறார். எல்லா மட்டத்திலும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள், சரளமாக கிடைக்கிறது. வயது வித்தியாசம் இன்றி சின்னஞ்சிறார்களும் அதை எளிதாக பெற முடிகிறது. இதற்கு பெயர்தான் திராவிட மாடலா?

இலவசத்தையும், பணத்தையும் கொடுத்து மக்களின் வாக்குகளை வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில், மக்களுக்கு கொடுப்பதற்காக, மக்களையே கொள்ளை அடிக்கும், திமுக ஆட்சியை கண்டித்து மாபெரும் அறப்போராட்டம் பிப்.21-ம் தேதி (நாளை) சென்னையில் நடைபெற இருக்கிறது. தமிழகம் இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 21-ம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகில் இருந்து, போர் நினைவுச் சின்னம் வரை திராவிட மாடல் இருளை போக்கும் விதமாக, மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது.

முன்னதாக, நாட்டைக் காக்கும் ராணுவ வீரரை கொலை செய்த திமுகவை கண்டித்து, அதே 21-ம் தேதி காலை 9.30 மணி அளவில் சிவானந்தா சாலையில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்துகொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது. தமிழக மக்களுக்கான இந்த அறப்போராட்டத்தில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x