Last Updated : 14 Feb, 2023 11:11 PM

 

Published : 14 Feb 2023 11:11 PM
Last Updated : 14 Feb 2023 11:11 PM

முதல்வர் ஸ்டாலினின் ‘பாராமுகம்’ - பதவி உயர்வு கனவில் 30,000 போலீஸார்

சேலம்: தமிழக முதல்வரின் ‘பாரா முகத்தால்’ காவல் துறையில் முதல்நிலை, தலைமை காவலர்கள், எஸ்எஸ்ஐ பதவி உயர்வுக்காக மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் போலீஸார் காத்திருக்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழக காவல் துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரையிலான பணியில் 1.50 லட்சம் போலீஸார் வரை பணியாற்றி வருகின்றனர். காவல் துறையில் பணியாற்றி வரும் போலீஸாருக்கு ‘சர்வீஸ் ’ அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது வழக்கம். இதன்படி, இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர்கள் 10 ஆண்டு பணி மூப்பு அடைந்ததும், முதல் நிலை காவலராக பதவி உயர்வு வழங்கப்படும். அதேபோல, முதல் நிலை காவலராக 15 ஆண்டு பணி மூப்பு அடைந்தவர்களுக்கு தலைமை காவலராகவும், 20 ஆண்டு பணி மூப்பு அடைந்தவர்களுக்கு எஸ்எஸ்ஐ (சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்) பதவி உயர்வு வழங்கப்படுவது நடைமுறையில் உள்ளது.

ஆனால், பல ஆண்டுகளாக 10 ஆண்டு முதல் 20 ஆண்டு பணி மூப்பு அடைந்த காவலர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு , மாநில அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. முதல்வரின் ‘பாரா முகத்தால்’ பதவி உயர்வு கனவு பழிக்காமல் போலீஸார் வேதனை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும் போது, ‘‘தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலராக இருந்து, முதல் நிலை காவலர் பதவி உயர்வுக்காக 15 ஆயிரம் போலீஸாரும், இரண்டாம் நிலை காவலராக இருந்து தலைமை காவலர் பதவி உயர்வுக்காக மாநிலம் முழுவதும் 8 ஆயிரம் போலீஸாரும், தலைமை காவலராக இருந்து எஸ்எஸ்ஐ பதவி உயர்வுக்காக 7 ஆயிரம் போலீஸாரும் காத்திருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக அளித்த வாக்குறுதியில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், போலீஸாருக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என கூறியிருந்தார்.

ஆனால், இதுவரை அதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலீஸாருக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை சம்பள உயர்வு கிடைக்கும். எனவே, காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் ‘முதல்வரின் கள ஆய்வு’ நிகழ்ச்சியில், போலீஸாருக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதன் மூலம், போலீஸாரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி கொள்வர்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x