Published : 31 May 2017 08:01 AM
Last Updated : 31 May 2017 08:01 AM

நகராட்சிகளில் பணிபுரியும் 204 துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் துப்புரவு பணியாளர்களாக நியமிக்கப்பட்ட 204 பேர் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து உரிய காலம் பணியாற்றிய பிறகு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு நேற்று உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள நகராட்சி களில் நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இவர்களில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யும்படி கோரினர். இதையடுத்து இதுதொடர்பாக 1997, 1998, 2006-ம் ஆண்டுகளில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இவற்றில், 1997, 1998-ம் ஆண்டு அரசாணைகளின்படி, தங்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி துப்புரவுப் பணியாளர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.இதனை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.

இந்த வழக்குகளை விசாரித்த மற்றொரு அமர்வு, துப்புரவு பணி யாளர்கள் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 3 ஆண்டுகளைக் கணக்கிட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இவ்வாறு இரண்டு அமர்வுகள் வெவ்வேறு உத்தரவு பிறப்பித்ததால், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி உத்தர விட்டார்.

இந்த வழக்குகளை விசாரித்த முழு அமர்வு, தமிழக அரசு 2006-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் படி துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும், தாங்கள் பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 3 ஆண்டுகளைக் கணக்கிட்டு பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரி துப்புரவு பணியாளர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எஸ்.நாகமுத்து, ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:

2006-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டது. அதனடிப்படையில் 2014-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், 1997, 1998-ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளுக்குப் பொருந்தும் வகையில், உரிய பணிக்காலத்தை முடித்த பின்னர், தாங்கள் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தேதியில் இருந்து பணி நிரந்தரம் பெற உரிமை உள்ளது.

2006, 2014 அரசாணைகள் மற்றும் 2013-ம் ஆண்டு முழு அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி துப்புரவுப் பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நிரந்தரம் செய்திருந்தால் அவற்றைத் திரும்பப் பெற்று இந்த புதிய உத்தரவின்படி பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x