Published : 22 May 2017 10:56 AM
Last Updated : 22 May 2017 10:56 AM

வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் தலைமை வகித்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவை மத்திய அரசு கொண்டாடி இருக்க வேண்டும். எத்தனை அச்சுறுத்தல்களிலும் அஞ்சாது நின்று நாட்டின் இறையாண்மையை நிலைநாட்டியவர் இந்திரா காந்தி. மாற்றம் வேண்டும் என பாஜகவுக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் வாக்குறுதிகள் எதையும் பாஜக நிறைவேற்றவில்லை. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.7,500 கோடியில் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத் திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் இதுவரை மத்திய அரசால் வழங்கப்படவில்லை. இந்த அரசு பணக்காரர்களுக்கான அரசாக உள்ளது என்றார் அவர்.

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏ.டி.எஸ். அருள், சிவசுப்பிரமணியன், காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x