Published : 20 Jan 2023 10:23 PM
Last Updated : 20 Jan 2023 10:23 PM

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு இதுவரை செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - மா.சுப்பிரமணியன் விளக்கம் 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப்படம்

சென்னை: "2021-22 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாடு அரசால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொற்றா நோய்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தவிர, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.681.64 கோடி வழங்கப்பட்டு, இதுவரை ரூ.407.06 கோடி செலவிடப்பட்டுள்ளது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களைத் தேடி மருத்துவம்" (MTM) திட்டத்தை பற்றி சமீபத்தில் நாளிதழ்களில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நான் நேற்றே விரிவாக ஊடகங்கள் வாயிலாக விபரம் தெரிவித்தேன்.மக்களைத் தேடி மருத்துவம் திட்டமானது மாநிலத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்கள், மேம்படுத்தப்பட்ட (ஊரக மற்றும் நகர்ப்புற) ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ஒன்றிய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களின் கவனத்தை கவரும் வகையில் பாராட்டுதல்களையும் சிறந்த வரவேற்பினையும் பெற்றுள்ள ஒரு முன்னோடித் திட்டமாகும்.

எதிர்கட்சித் தலைவர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு இதுவரை செலவிட்ட தொகை என்ற விபரம் கேட்டிருந்தார்கள். அதுகுறித்த விபரம் பின்வருமாறு :-

  • 2021-22 மற்றும் 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாடு அரசால் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொற்றா நோய்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு தவிர, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடாக ரூ.681.64 கோடி வழங்கப்பட்டு, இதுவரை ரூ.407.06 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • நிர்ணயிக்கப்பட்ட பயண திட்டப்படி பெண் சுகாதார தன்னார்வலர்கள் (WHV), MTM பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்களை கண்டறிவதற்கு ரூ.77.74 கோடி செலவில் கருவிகள் மற்றும் நுகர்ப்பொருட்கள் (Consumables) வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
  • மேற்கூறிய MTM களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.123.27 கோடி செலவிடப்பட்டு வருகிறது.
  • உறுதிசெய்யப்பட்ட MTM பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் மருந்துப்பெட்டகம் மற்றும் அதனுள் அடங்கிய உயர் இரத்த அழுத்தம் / நீரிழிவு நோய்களுக்கான 15 வகையான தரமான மருந்துகள் ரூ.125.89 கோடி செலவில் வழங்கப்பட்டு வருகிறது.
  • இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தாங்களே வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளக்கூடிய ஆம்புலேட்டரி பெரிட்டோனியல் டயாலிசிஸ் (CAPD) சிகிச்சைக்கு தேவையான திரவப்பைகள் ரூ.7.68 கோடி செலவில், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
  • பொதுவாக சிறுநீரக நோயாளிகள் இரத்த சுத்திகரிப்பு சேவைகளுக்கு (Hemodialysis) ஒரு குறிப்பிட்ட மருத்துவமனைக்கு மட்டுமே சென்றுவரக் கூடிய நிலையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் வீட்டில் இருந்தபடியே செய்துகொள்ளக்கூடிய ஆம்புலேட்டரி பெரிட்டோனியல் டயாலிசிஸ் (CAPD) சிகிச்சை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர் உட்பட அனைவருக்கும் தினசரி வாழ்க்கையை எந்தவித தடையுமின்றி மேற்கொள்வதற்கு மிக பயனுள்ள உன்னதமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

வலி நிவாரணம் மற்றும் நோய் ஆதரவு சிகிச்சை (Pain and Palliative Care) சார்ந்த முரண்பாடான தகவலை எதிர்கட்சித் தலைவர் அவர்கள் அளித்துள்ளார். அதன் விபரம் பின்வருமாறு :-

  • முந்தைய அரசின் காலத்தில், நோய் ஆதரவு சேவைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அளவிலும், வட்டார ஆரம்ப சுகாதார நிலைய அளவிலும், அரசு மருத்துவமனை சார்ந்த சேவைகளாக வழங்கப்பட்டு வந்தது.
  • நோய் ஆதரவு சேவைகள் பெறும் நோயாளிகள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலையில் இருப்பதால், அவர்களின் இல்லங்களுக்கே சென்று மிக அத்தியாவசியமான நோய் ஆதரவு சிகிச்சைகள் வழங்குவது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மிகச் சிறப்பான அம்சமாகும்.
  • மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வழங்கப்படும் இந்த ஈடில்லா சிறப்பான சேவை இல்லையென்றால், இந்த பயனாளிகளுடைய வாழ்க்கைத்தரமும், மனஉறுதியும் சீர்குலைந்து போகும் நிலைமையை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இத்திட்டத்தைக் குறித்த உறுதிசெய்யப்படாத மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மறுக்கப்படுகிறது. உண்மை இவ்வாறு இருக்கையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பயனாளிகளின் இல்லங்களுக்கே நாள்தோறும் சென்று தங்கள் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை நல்கி வரும் 2,432 MTM செவிலியர்கள், 10,969 பெண் சுகாதார தன்னார்வலர்கள், 463 நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்கள் மற்றும் 463 இயன்முறை மருத்துவர்கள் கொண்ட களப்பணியாளர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் வேதனையையும் தந்துள்ளது என்பது மிகவும் வருந்ததக்க ஒன்றாகும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x