Last Updated : 20 Jan, 2023 08:49 PM

 

Published : 20 Jan 2023 08:49 PM
Last Updated : 20 Jan 2023 08:49 PM

இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,105 இடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை: வேளாண் பல்கலை. அறிவிப்பு

கோப்புப்படம்

கோவை: இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,105 இடங்களுக்கு உடனடி மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கை 2022-23 உடனடி மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,105 மாணவர் சேர்க்கைக்கான இடங்களை நிரப்புவதற்கான உடனடி மாணவர் சேர்க்கை வரும் 24-ம் தேதி நடக்க உள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், கலந்தாய்வுக்குரிய குறிப்பிட்ட தேதியில், கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு வரவேண்டும். உடனடி மாணவர் சேர்க்கை, பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளுக்கு மட்டுமே பொருந்தும், உறுப்புக் கல்லூரிகளுக்கு பொருந்தாது.

பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று கலந்தாய்வினை தவறவிட்டவர்கள் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்கள், புதியதாக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களும் கலந்து கொள்ளலாம். அதேசமயம், பொது கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்கள், சேர்க்கை பெற்றவர்கள், இடைநிறுத்தம் செய்து கொண்டவர்கள் கலந்து கொள்ளக்கூடாது.

உடனடி மாணவர் சேர்க்கையில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்யும் முன், கலந்தாய்வுக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. கலந்தாய்வில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவு ரூ.1,500 மற்றும் இதர பிரிவினர் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். இணைப்புக் கல்லூரிகளுக்கான ஆண்டுக்கட்டணம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையாகும்.

உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளில், இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் வளாகத்துக்கு வர வேண்டும். மாணவர் சேர்க்கையின் போது, இணைப்புக் கல்லூரிகளுக்கான உணவு, தங்குமிடக்கட்டணம் குறித்த விவரங்களை, மாணவர்கள் இணைப்புக் கல்லூரி ஆசிரியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். உடனடி மாணவர் சேர்க்கையில் பங்கேற்ற மாணவர்களின் வருகைப்பதிவேடு குறிக்கப்பட்டு தரவரிசை நிர்ணயிக்கப்படும்.

மாணவர்களுக்கு கல்லூரி காலியிடம் திரையில் தெரிவிக்கப்படும். தரவரிசையின் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரி மற்றும் பட்டப்படிப்பினை தேர்வு செய்ய அழைக்கப்படுவர். இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டுக்கட்டணத்தை செலுத்தி உடனடியாக கல்லூரியில் சேரலாம். உடனடி மாணவர் சேர்க்கைக்கான வகுப்புவாரியான இட ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் மற்றும் காலியிடங்களுக்கான அட்டவணை www.tnau.ucanapply.com என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x