Published : 26 Dec 2022 09:13 PM
Last Updated : 26 Dec 2022 09:13 PM

மோசடி ஆவணங்களின் பதிவை ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்தம்: உயர் நீதிமன்றம் புது உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: மோசடி ஆவணங்கள் பதிவை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள சட்டத் திருத்தத்தை திறமையாக அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய கோரி மாவட்ட பதிவாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த மாவட்ட பதிவாளர், குறிப்பிட்ட அந்த ஆவணங்கள் மோசடியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பித்தபோதும், அதை ரத்து செய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டை விசாரித்த கோவையில் உள்ள பதிவுத்துறை துணைத் தலைவர், சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவரிடம் முறையீடு செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், "பதிவு சட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொண்டுவந்த திருத்ததின் படி, மோசடியானவை என கண்டறியப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளருக்கும், பதிவு துறை துணை தலைவருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனக்கூறி, இருவரின் உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும், தமிழக அரசின் சட்டத்திருத்தம் குறித்து மாவட்ட பதிவாளர் அறிந்து கொள்ளாமல் இருப்பது தீவிரமானது. அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். தமிழக அரசின் சட்ட திருத்ததின் படி, மோசடியாக பதியப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய மாவட்ட பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ள சட்டத் திருத்தத்தை திறமையாக அமல்படுத்தும் வகையில் அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி, பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x