Published : 18 Dec 2022 05:12 AM
Last Updated : 18 Dec 2022 05:12 AM

சென்னையில் ரூ.10.26 கோடி மதிப்பில் 12 மேம்பாலங்களை அழகுபடுத்தும் பணி தீவிரம்

சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சியில் 14 மேம்பாலங்கள் மற்றும் 12 ரயில்வே மேம்பாலங்கள், 16 வாகன சுரங்கப் பாதைகள், 5 பாதசாரிகளுக்கான சுரங்கப் பாதைகள், 4 நடை மேம்பாலங்கள் மற்றும் 234 சிறுபாலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் பேசும்போது, சென்னை மாநகரை அழகுபடுத்தும் வகையில், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.25 கோடியில், மாநகராட்சி மேம்பாலங்களின் கீழ் பகுதியில் செயற்கை நீரூற்று, வண்ண விளக்குகள் அமைத்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெறும்" என்றார்.

இதன்படி, சென்னையில் உள்ள 12 மேம்பாலங்களை, ரூ.10.26 கோடியில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு, வண்ண விளக்குகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்படும்.

தற்போது ரூ.1.51 கோடியில் கோயம்பேடு மேம்பாலம், மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம், தில்லை கங்கா நகர்,புழுதிவாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட எம்ஆர்டிஎஸ் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளை அழகுபடுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளன.

தொடர்ந்து, ரூ.8.51 கோடியில் பாந்தியன் சாலை-காசா மேஜர் சாலை சந்திப்பு மேம்பாலம், காந்தி மண்டபம் சாலை மேம்பாலம், சக்கரபாணி தெரு மேம்பாலம், காமாட்சி மருத்துவமனை மேம்பாலம், வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலம் மற்றும் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள கலைவாணர் மேம்பாலம் ஆகிய 6 மேம்பாலங்களை அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல, பெரம்பூர் சுரங்கப் பாதையில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், ரூ.24 லட்சம் மதிப்பில் அழகுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x