Published : 17 Dec 2022 06:20 AM
Last Updated : 17 Dec 2022 06:20 AM

திருப்பூர், ஓசூர் உட்பட 10 இடங்களில் பேருந்து நிலையங்கள் கட்ட ரூ.115 கோடி ஒப்புதல்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகள், 8 நகராட்சிகள் என 10 இடங்களில்புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு ரூ.115.37 கோடிநிதிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கிஅரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மானிய கோரிக்கையின்போது, குறிப்பிட்ட சில மாநகராட்சிகள், நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் அறிவித்தார்.

அதன்படி, கட்டமைப்பு மற்றும் சேவைகள் நிதியில் இருந்து புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான கருத்துருவை தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுப்பினார்.

இந்நிலையில், 19-வது மாநில கட்டமைப்பு மற்றும் சேவைகள் மேம்பாட்டு குழுவானது, பேருந்துநிலையங்கள் கட்ட நிர்ணயிக்கப்பட்ட தொகையில் 50 சதவீதத்தை மானியமாக வழங்குவதாக கடந்த ஜூலை மாதம் தெரிவித்தது.

இதையடுத்து, மீதமுள்ள தொகையை இதர பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து திரட்டுவது குறித்து அரசுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் கடிதம் எழுதினார். அதில், தூய்மை பாரத இயக்கம் 2.0 திட்டத்தில் இருந்து பொதுக்கழிப்பிடம் கட்டுதல், சுற்றுச்சுவர் கட்டுவதற்கான நிதியை 15-வது நிதி ஆணையத்தின் ஒதுக்கீட்டில் இருந்து பெறலாம்.

இதையடுத்து, திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகளில் முறையே ரூ.26 கோடி, ரூ.30 கோடியில் பேருந்து நிலையம் அமைக்கவும், கூடலூரில் ரூ.2.30 கோடி, அரியலூரில் ரூ.7.80கோடி, வடலூரில் ரூ.5.85 கோடி,வேதாரண்யத்தில் ரூ.4 கோடி, மேலூரில் ரூ.7.43 கோடி, பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி, குளச்சலில் ரூ.5 கோடி, பொள்ளாச்சியில் ரூ.7 கோடி என ரூ.115.37 கோடி மதிப்பில் பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான திட்டம், நிதித்திட்டத்தை அரசுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் அளித்தார்.

மேலும், இந்த 10 இடங்களிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கான நிர்வாக ஒப்புதல் கோரினார். அவரின் கருத்துருவை பரிசீலித்த தமிழக அரசு, 10 இடங்களிலும் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளித்தது.

இதுதவிர, தூய்மை பாரத இயக்கம் மற்றும் மூலதன மானிய நிதி ஆகியவற்றில் இருந்து நிதியைப் பெறுவதற்கான உத்தரவு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகளில் முறையேரூ.26 கோடி,ரூ.30 கோடியில் பேருந்து நிலையம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x