Published : 17 Dec 2022 05:26 AM
Last Updated : 17 Dec 2022 05:26 AM

உச்ச நீதிமன்றத்துக்கு ஜன.1 வரை விடுமுறை - தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் அறிவிப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நேற்று கூறிய தாவது: நாளை முதல் (இன்று) ஜனவரி 1-ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்தில் அமர்வுகள் எதுவும் செயல்படாது. இரண்டு வார குளிர்கால விடுமுறைக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் ஜனவரி 2-ம் தேதி முதல் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சட்ட அமைச்சர் கிரண்ரிஜிஜு கடந்த வியாழன்று மாநிலங்களவையில் பேசிய போது, “நீதிமன்றங்களுக்கு நீண்ட காலம் விடுமுறை விடுவது நீதியை நாடுபவர்களுக்கு வசதியாக இல்லை என்ற உணர்வு மக்களிடையே உள்ளது’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அடுத்த நாளே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 2 வார குளிர்கால விடுமுறையில் நீதிமன்றம் செயல்படாது என அறிவித்துள்ளது பல்வேறு வியூகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இது, மத்திய அரசு மற்றும் நீதிமன்றம் இடையே உள்ள மோதலை வெளிப்படுத்துவதாக உள்ளது என நீதித் துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீதிமன்ற விடுமுறைகள் தொடர்பான பிரச்சினை ஏற்கெனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா உட்பட பலர், “நீதிபதிகள் விடுமுறையில் சுகமாக தங்கி ஓய்வெடுக்கிறார்கள் என்பது தவறான கருத்து. நீதிபதிகள் அவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்து தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். மக்களுக்கு நீதிவழங்குவது என்கிற பொறுப்பு மிகவும் சுமையானது’’ என்றுஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x