Last Updated : 15 Dec, 2022 04:07 PM

 

Published : 15 Dec 2022 04:07 PM
Last Updated : 15 Dec 2022 04:07 PM

ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை தேவை: மக்களவையில் ரவிகுமார் எம்.பி வலியுறுத்தல்

மக்களவையில் ரவிக்குமார் எம்.பி.

புதுடெல்லி: பெண்களை இந்திய ராணுவத்தின் தாக்குதல் பிரிவிலும் சேர்க்க வேண்டும் என்று மக்களவையில் டி.ரவிகுமார் எம்.பி வலியுறுத்தியுள்ளார். ராணுவத்தில் பெண்களை பாலின ரீதியாக பாகுபடுத்தக்கூடாது, அவர்களைத் தாக்குதல் பிரிவிலும் சேர்க்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டுள்ளது. இதை இன்று மக்களவையில் விழுப்புரம் எம்.பி டி.ரவிகுமார் வலியுறுத்தினார்.

இதன் மீது விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பியான டி.ரவிகுமார் நாடாளுமன்றத்தில் பேசியதாவது: ''தி செக்ரட்டரி, மினிஸ்ட்ரி ஆஃப் டிஃபென்ஸ் எதிர்மனுதாரர் பபிதா புனியா மற்றும் பிறர் என்ற வழக்கு 2020 இல் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. இதில் உச்ச நீதிமன்ற அமர்வு, இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது, அரசாங்கங்கம் முன்வைத்த வாதங்கள் 'பாலின ஸ்டீரியோடைப்' என அமர்வு விமர்சித்தது.

கடந்த நவம்பர் 21, 2022-இல், உச்ச நீதிமன்றம் 'பபிதா புனியா' தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்திய ராணுவத்தில் பபிதா புனியா தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

பெண் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில் இளைய ஆண் அதிகாரிகள், பெண் அதிகாரிகளைப் புறக்கணிக்கும் போக்கையும், பபிதா புனியா வழக்கின் தீர்ப்புக்கு எதிராக இருக்கும் நடைமுறைகளையும் உடனடியாக நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

ராணுவத்தின் போர் பிரிவுகளை பெண்கள் அணுக முடியாததாக அமைத்திருப்பது நியாயமற்றது, பாலின சமத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் கொள்கையைத் திருத்த வேண்டும்.

பதவி உயர்வு மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பாலினக் கொள்கை இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட வேண்டும். இந்திய ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கையில் உள்ள மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, ஒட்டுமொத்தமாக மட்டுமல்லாமல், பல்வேறு பதவி உயர்வு மற்றும் பல்வேறு பிரிவுகளிலும், ராணுவத்தில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்'' என்று ரவிக்குமார் எம்.பி. பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x