Last Updated : 12 Dec, 2022 05:10 PM

 

Published : 12 Dec 2022 05:10 PM
Last Updated : 12 Dec 2022 05:10 PM

சங்கராபுரத்தில் கனமழை: ஏரிக்கரை உடைந்து 50+ குடிசைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி

சங்கராபுரம் அருகே குடிசைப் பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்.

கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் நேற்று இரவு பெய்த கனமழையினால் ஏரிக்கரை உடைந்து குடிசைப் பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஏரியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் கரைகள் உடைப்பு ஏற்பட்டு ஏரி நீர் கொசபாடி கிராமத்துக்குள் புகுந்து 50-க்கும் மேற்பட்ட குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் பாதிகப்பட்டுள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மிதமான மழைபெய்துவந்த நிலையில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு கனமழையாக நீடித்தது. இதனால், தாழ்வானப் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஏரி, குளங்களுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. அந்த வகையில், சங்காரபுரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, சங்கராபுரம் வட்டத்திற்குட்பட்ட கொசபப்பாடி, செல்லம்பட்டு ஜவுளிக்குப்பம் ஆகிய கிராமங்களுக்குள் நீர் புகுந்துள்ளதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்ததால் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. மேலும், கிராமச் சாலைகள் தரை மட்டத்திலிருந்து உயர்வாக அமைக்கப்பட்டு, வடிகால் வாய்க்காலும் முறையாக அமைக்காததால் ஏரி தண்ணீர் குடியிருப்புகளுக்கு புகுந்து அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொசப்பாடியில் இருந்து அரசம்பட்டு செல்லும் சாலையில் ஏரியிலிருந்து தண்ணீர் சாலையில் இரு புறங்களின் சென்று வயல்வெளிப் பகுதிகளுக்கு செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் நடந்து செல்வோரும் மிகவும் அச்சத்திலேயே கடந்து செல்கின்றனர். மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் அச்சமின்றி வாகனங்களில் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இதனை துரிதப்படுத்துவதற்காக தீயணைப்புத் துறையினர் மீட்பு மணிக்கு தயாராக நிலையில் உள்ளனர்.

இந்த வெள்ளப்பெருக்கு, 2011-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மழை காலங்களில் தொடர்ந்து ஏரி உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் தண்ணீர் வருவது தொடர்ந்து ஒரு வாடிக்கையாக உள்ளதாகவும், இதுகுறிச்சி ஊராட்சி நிர்வாகம் எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காததால், இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இரவு நேர பேருந்துகள் கொசுப்பாடி, செல்லம்பட்டு, மம்மலை, மாத்தூர், அக்ராயபாளையம், கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி போன்ற இவ்வழியாக செல்லக்கூடிய பேருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிச் செல்லும் மாணவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x